Skip to main content

தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு; சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

sivakarthikeyan and gnanavel raja case postponed april13

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், "மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும், தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

 

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும், அதனால் தங்களுக்கு ரூ. 20 கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது  சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் பட நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை மறைத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும்,  ஞானவேல் ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி சுந்தர்,  இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கை வரும் ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்