பெங்களூரைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவரான அவர், பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால், மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் திறன் கொண்டவர். இந்த திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். 2013 ஆண்டு தனது 83 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.


உலகின் வேகமான அதிவேக மனிதக் கணினி என்று அழைக்கப்படும் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதை விரைவில் சினிமாவாக மாற இருக்கிறது. சகுந்தலா தேவியாக, நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த அனுமேனன் இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இதில் வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சகுந்தலா தேவியை போல முடியை, குட்டையாக வெட்டி தோன்றுகிறார் வித்யா பாலன். இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.