
மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் வசித்து வரும் வீட்டிற்கு 'மன்னத்' என பெயர் வைத்து அதில் வாழ்ந்து வருகிறார் ஷாருக்கான். இந்த வீட்டை தனது கனவு இல்லமாக கருதும் ஷாருக்கான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கினார். அப்போது இருந்து இப்போது வரை அந்த வீட்டில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அவர் இப்போது தற்காலிகமாக மன்னத் வீட்டில் இருந்து வெளியேறி வாடகை வீட்டிக்கு குடியேறவுள்ளார்.
மன்னத் வீட்டில் மேலும் இரண்டு மாடிகள் கட்டப்பட இருக்கின்றன. அதோடு முன்பை விட பிரம்மாண்டமாக புதுப்பிக்கும் பணிகளும் நடக்கவுள்ளது. இதன் காரணமாக மே மாதம் முதல் ஷாருக்கான் தற்காலிகமாக மன்னத் வீட்டை விட்டு வெளியேறி அதே பாந்த்ரா பகுதியில் உள்ள பூஜா காசா என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் குடியேறுகிறார். இந்த குடியிருப்பில் நான்கு தளங்களை வாடகைக்கு வாங்கியுள்ளார்.
இந்த குடியிருப்பு இருக்கும் இடம் பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானிக்கு சொந்தமானவை. இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் தயாரிப்பாளரின் மகன் மற்றும் மகளின் பெயரில் இருக்கிறது. மகன் ஜாக்கு பக்னானி நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்குடைய கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னத் பங்களாவை விட ஷாருக்கான் தற்போது குடியேறப்போகும் வீடு பாதி அளவை விட கம்மியான சதுர அடி இடம் கொண்டவையாகும். இந்த வீட்டிற்கு முன்பணமாக 32.97 லட்சம் கொடுத்திருக்கும் ஷாருக்கான் ஒரு வீட்டிற்கு 11.54 லட்சமும் மற்றொரு வீட்டிற்கு 12.61 லட்சமும் மாத வாடகையாகக் கொடுக்கவுள்ளார். ஏப்ரலில் இருந்து வீட்டு வாடகை தொடங்குகிறது.