சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெயிலர்' படம் நேற்று முன்தினம் (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. ரஜினி ரசிகர்கள் திரையரங்கு முன் பேனர், பட்டாசு, கேக் வெட்டுதல் என ரசிகர்கள் பெரியளவில் ஓப்பனிங் கொடுத்தனர். மேலும் விதவிதமான முறையில் கொண்டாடி வரவேற்றனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளித்தது.
இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல ஓப்பனிங் இருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதாக நெல்சன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ராபிடோ நிறுவனம் அவர்களது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜெயிலர் படத்தை இலவசமாகத் திரையிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 500 க்கும் அதிகமான அந்நிறுவன ஆட்டோ ஓட்டுநர்கள் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பெங்களூருவிலும் இதே போன்று அந்நிறுவனதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இலவசமாகப் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த, ஆட்டோ ஓட்டுநராக பாட்ஷா படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது ஓப்பனிங் பாடலாக வரும் 'ஆட்டோக்காரன்...' பாடல் ஆட்டோக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.