![rajkiran](http://image.nakkheeran.in/cdn/farfuture/lIvLQO7p-GPWFvl-zBMSgRYvQUz0kWQTSXu3K36WQmQ/1552489128/sites/default/files/inline-images/rajkiran_1.jpg)
பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுக்க அனைவரையும் கலங்கடித்துள்ளது. பல பெண்களுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவலநிலையை கண்டு பலர் வெகுண்டெழுந்து தங்களின் கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் பிரபலங்களும் அடங்குவார்கள். தமிழகத்தில் முன்னணி நடிகராக இருந்த ராஜ்கிரன் இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
“ஒரு தகப்பனாய்,
ஒரு தாத்தனாய்,
பல நூற்றுக்கணக்கான
என் பெண் குழந்தைகளுக்கு
இழைக்கப்பட்டிருக்கும்
அநீதியை நினைத்து,
அவர்களின் வாழ்க்கை
சூறையாடப்பட்டிருப்பதை அறிந்து,
அழுது தவிக்கிறேன்...
தனிமனிதனான என்னால்,
எதுவுமே செய்ய முடியாமலிருக்கும், எனது
இயலாமையை நினைத்து குமுறுகிறேன்...
அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும்,
காவல் துறைக்கும், புலனாய்வுத்துறைக்கும்
தெரியாமல், ஏழு வருடங்களாக, இப்படி பல
படுபாதகச்செயல்கள் நடந்து,
ஆயிரக்கணக்கான காணொளிகள்
எடுக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை...
ஆதலால்,
தமிழ் நாட்டின் மாணவச்செல்வங்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள்,
மனித நேயர்கள் அனைவரையும்
உதவி கேட்டு நான் கெஞ்சுகிறேன்...
இந்த வழக்கை பொறுப்பில் இருக்கும்
காவல் துறையினரிடமிருந்து தவிர்த்து,
சிறப்பு நீதி மன்றத்தின் மூலம்,
நீதி மன்றத்தின் மேற்பார்வையிலேயே,
தன்மானமும், கடமை உணர்வும்,
அரசியல், அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாத
நேர்மையும், நெஞ்சுரமும் கொண்ட
காவல் துறை அதிகாரிகளை தேர்ந்தெடுத்து,
அவர்கள் மூலம் வழக்கை நடத்தி,
குற்றம் சாட்டப்பட்டவர்கள்,
மற்றும்
அவர்களுக்கு துணை போன,
அவர்களுக்காக மூடி மறைத்த,
அவர்களால் பயனடைந்த
அத்தனை முக்கிய பிரமுகர்களையும்
கூண்டிலேற்றி, நீதியை நிலை நாட்டவும்
தர்மம் காக்கப்படவும்,
உங்கள் அனைவரையும் கெஞ்சுகிறேன்...” இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.