
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பல விதமான கோரிக்கைகளை முன் வைத்து சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் புது பட வெளியீட்டை நிறுத்தி வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த டிஜிட்டல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் கூடிய dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது திரையுலகில் மாபெரும் மைல்கல் ஆகும். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும். இந்த புதிய ஒப்பந்தத்தால் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்ட்ரைக் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.