Skip to main content

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல மலையாள நடிகை!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Parvathy Thiruvothu

 

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது சமீபத்தில் பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த வேடன், எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்ட வேடன், அதன் வாயிலாக அனைவரிடமும் மன்னிப்பு கோரினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வேடனின் இத்தகைய மன்னிப்பு கேட்கும் முறையைக் கடுமையாக விமர்சித்தனர்.

 

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகை பார்வதி திருவோத்து, வேடனின் அப்பதிவிற்கு லைக் செய்திருந்தார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரசிகர்கள், பார்வதியின் செயல் பாலியல் குற்றச்சாட்டிற்குள்ளான ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளது எனக் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். நடிகை பார்வதியின் செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

அதில், "குற்றம்சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக தைரியமாகப் பேசவந்த பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். பல ஆண்கள் தன் தவறை ஒப்புக்கொள்ளக்கூட யோசிக்கும் நிலையில் அவரது அந்த மன்னிப்பு பதிவை நான் லைக் செய்திருந்தேன். ஆனால், இது ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய மன்னிப்பு அல்ல என்பதும் எனக்குத் தெரியும். இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது மிக முக்கியம். வேடனின் இந்த மன்னிப்பு பதிவு சரியாக இல்லை என பாதிக்கப்பட்ட சிலர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் எனது லைக்கை நீக்கிவிட்டேன். அவரை மன்னிப்பதும், பாதிப்பிலிருந்து மீள நினைப்பதும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை. அவர்கள் பக்கம்தான் நான் என்றும் நிற்பேன். என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்