Skip to main content

“அதையெல்லாம் நாம் தடுக்க முடியாது... கடந்துதான் செல்ல வேண்டும்” - மீண்டும் வீடியோ வெளியிட்ட பார்த்திபன்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

parthiban released a video again and explained issue of his iraivin nizhal movie

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்படுவதற்காக தேர்விலிருந்த 13 படங்களின் பட்டியலில் 'இரவின் நிழல்' படமும் ஒன்றாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் தனக்கே தெரியாமல் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெயரில் தான் வெளியானது. 

 

ad

 

ஆனால் இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது திரைப்படம் எனவும், இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் எனவும் பிரபல வலைதளமான ஐஎம்டிபி (IMDB) வலைதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைதளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பார்த்திபன், "நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் ஃபர்ஸ்ட் படம் இரவின் நிழல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில் மீண்டும் இதற்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "முதலில் மகிழ்ச்சி. படம் அமேசானில் வெளியாகியிருக்கிறது. எனக்கு எதுவுமே சுலபமா நடக்குறதில்ல. அமேசானில் வெளியானா நல்லா இருக்கும், திரையரங்குகளில் பார்க்காவாதங்க கூட பாப்பாங்கனு ஆசைப்பட்டேன். ஆனால் எந்த நேரத்தில் வெளியாகும் என யாருக்குமே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் காலையில் அது வெளியாகியுள்ளது. 

 

மேலும் இந்தப் படம் பற்றி ஐஎம்டிபி (IMDB) வலைதளத்தில் இடம்பெற்ற கமெண்ட்ஸ் ரொம்ப ஷாக்காக இருந்தது. இதற்கு பின்னாடி என்ன சூழ்ச்சின்னு தெரியல. அது சூழ்ச்சியானும் தெரியவில்லை. அதே மாதிரி, அந்த கமெண்ட் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கழித்து மாறியிருக்கு; மாறியது இன்னும் ஷாக்காக இருந்தது. புதுசா மாறியிருக்க கமெண்ட் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

 

சினிமாவைத் தாண்டி மத்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் குறைவு. அது போல் ஐஎம்டிபி என்றால் என்ன, அதில் வரும் கமெண்ட்ஸ் எப்படி வருது என்று மற்றவர்களிடம் கேட்டு தெரிஞ்சிக்கிற ஒரு நபர் நான். எதிர்மறை விமர்சனங்கள், மிகப்பெரிய படைப்பைக் கூட கஷ்டப்படுத்தி விடுகிறது. அதையெல்லாம் நாம் தடுக்க முடியாது. அதைக் கடந்துதான் செல்ல வேண்டும். 

 

என்னிடம் இரவின் நிழல், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்று நிரூபிக்கும் வகையில் நிறைய சாட்சியங்கள் மற்றும் மிகப்பெரிய அறிஞர்கள் கூறிய சான்றிதழ்கள் இருக்கின்றன. சினிமாவில் வருமானமே இல்லாமல் தொடர்ந்து நல்ல முயற்சிகள் எடுத்து வருகிறேன். மேலும் இரவின் நிழல் படத்தின் மேக்கிங் விரைவில் வரும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்