Skip to main content

சாதனை படைத்து வரும் 'ஆர்.ஆர்.ஆர்' பட பாடல்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

bfhdn

 

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரௌத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருடம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

 

இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதரக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. மேலும், ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு அறிவித்திருந்த நிலையில், எஞ்சியுள்ள பாடல்களில் ஒரு பாடலை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு முடிவுசெய்துள்ளதாக சமீபத்தில் புதிய தகவல் வெளியானது. 

 

bfdshfdshsd

 

இந்தப் படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் உக்ரைனிற்குச் செல்லவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது. இதற்கிடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்காக நட்பைப் பற்றிய விளம்பரப் பாடல் ஒன்றைத் திட்டமிட்டுப் படமாக்கியுள்ளார் ராஜமெளலி. 'நட்பு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. 5 மொழிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று, தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவரும் நிலையில் இப்பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.