தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் எனப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கோவையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த அவர், மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்பு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், அஜித்தை வைத்து எப்போது படம் பண்ணப் போறீங்க என்று கேள்வி கேட்ட நிலையில், "வாய்ப்பு கிடைக்கும் போது பண்ணுவேன்" என்றார். பிறகு 'அப்படி அஜித்தை வைத்துப் படம் எடுத்தால் அது எல்சியு-க்குள் வருமா? என்ற கேள்விக்கு, "முதலில் வாய்ப்பு கிடைக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்" என பதிலளித்தார்.