
ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தைச் சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்த முறை பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் கமலிடம் சமீபத்தில் ஐசரி கணேஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இப்படத்தில் நயன்தாராவைத் தவிர்த்து ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர். நடிப்பதாகத் தெரிவித்தார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்ற நாளில் இருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சுந்தர்.சி-க்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது படத்தின் ஒரு தயாரிப்பாளரான குஷ்பு மறுத்துள்ளார்.

குஷ்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சுந்தர்-சியின் நலம் விரும்பிகளுக்கு... மூக்குத்தி அம்மன்2 பற்றி தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள். படப்பிடிப்பு சுமுகமாக திட்டமிட்டபடி நடந்து வருகிறது. சுந்தர் ஒரு முட்டாள்தனமான நபர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா ஒரு நல்ல நடிகை, தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு வேடத்தில் இப்போது மீண்டும் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வதந்திகள் படத்துக்கு திருஷ்டிகள் போல அமையும். நடப்பது எல்லாம் நன்மைக்கே. உங்கள் நல்லெண்ணம், ஆசீர்வாதம் மற்றும் அன்பு... இதை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.