Skip to main content

இளவரசு தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
ilavarasu cinematography case closed

தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராகத் தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனக் கூறி கடந்த 2022-ம் ஆண்டு போலீசாருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.  

இதனைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு, நீதிமன்றத் தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் போலீசார் வழக்கு விசாரணையை முடிக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்த நிலையில், டிசம்பர் 12 ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகக் கூறி, அது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதை மறுத்த இளவரசு தரப்பு, டிசம்பர் 13 ஆம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்து சிசிடிவி காட்சிகள் போலியானவை எனக் கூறியது. 

இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு இந்த வழக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, டிசம்பர் 12 ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜர் ஆனதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்து மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இளவரசை எச்சரித்திருந்தார். மேலும் காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்த விசாரணையில், காவல் நிலையத்தில் ஆஜரானது தொடர்பாகத் தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இளவரசு புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டி பஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார். இதையடுத்து நடந்த விசாரணையில், பாண்டி பஜார் காவல் ஆய்வாளர்கள் 5 பேர் நேரில் ஆஜராகினர். மேலும் அவர்களது தரப்பு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரிகை தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கீழமை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது. புகார் தொடர்பாக மீண்டும் உதவி ஆணையர் விசாரிக்க உள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சார்ந்த செய்திகள்