Skip to main content

“1 மணி நேரம் அழுதேன்” - எமோஷ்னலாக பேசிய இளன் தந்தை 

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
elan father and actor raja rani pandian emotional speech at star movie press meet

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் தயாரிப்பில், இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஸ்டார்'. இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், கவின், இளன் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

அப்போது இயக்குநரின் தந்தையும், நடிகருமான 'ராஜா ராணி' பாண்டியன் பேசுகையில், “என்னைத் திரைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்த ஸ்டில்ஸ் ரவிக்கு முதல் வணக்கம். 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எண்ணற்றோன் கொல் எனும் சொல்' எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப என்னை உயர்த்தி விட்டார் என் மகன் இளன். அவன் சிறிய வயதிலேயே பேன்சி டிரஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு செல்வேன். நடிகை நளினி இதைப் பார்த்து என்னிடம், 'உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாயா? ' எனக் கிண்டலுடன் கேட்பார். அவன் வீரசிவாஜி வேடம் அடைந்திருந்த போது, தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கிப் பிடிக்க.. உடனே, 'மேடையில் நீங்கள் வந்து தாங்கி பிடிப்பீர்களா?' எனக் கேட்டுவிட்டு கையை எடுத்து விட சொன்னார். அந்த அளவிற்கு அவனை நான் தயார்படுத்திருந்தேன். அவனும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

நடிப்பை தொடர்ந்தாலும் கல்வி விசயத்தில் நான் உறுதி காட்டியதால் அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகுதான் என்னை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினான். படிப்பை முடித்த பிறகுதான் இந்தத் துறையில் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தேன். அதனையும் ஏற்றுக் கொண்டான். அத்துடன் பட்டதாரியான பிறகு வேலை தேடுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம். அப்போது எனக்கு சோறு போடுவீர்களா! எனக் கேட்டார். போடுவோம் என்றேன். அது போல் நினைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள் சோறு போடுங்கள். நான் இயக்குநராகி காட்டுகிறேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் இயக்குநராகி விட்டார்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் நான் அவருக்கு வாய்ப்பு அளித்தேன் அதனை அவர் பயன்படுத்தி இயக்குநராகிவிட்டார். இதை மறுத்து என்னுடைய கருத்தை மட்டுமே திணித்துக் கொண்டிருந்தால்.. அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். நான் ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளராக இருக்கும் போது, ஸ்டில் ஃபோட்டோகிராபராக ஒரு திரைப்படத்திற்கு போயிருந்தேன். இயக்குநர் ஒரு நடிகருக்கு எப்படி சொல்லித் தராரு, அதை அவர் எப்படி நடிக்கிறாரு என்பதை கவனிப்பேன். இரண்டு பேரும் ஒப்பிட்டு பார்த்து இயக்குநர் சொன்னபடி ஹீரோ நடிக்கவில்லையே, நானாக இருந்தால் இயக்குநர் சொன்னபடியே நடிப்பேனே என எனக்குள் கற்பனை பண்ணிக்கிட்டேன்.  அப்போது ஒருவர் வந்து,  ‘உன் மூஞ்சிய வச்சிக்கிட்டு இங்க நிக்காத போயா’ எனச் சொன்னார். அதனால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் அழுதிருப்பேன்.

எல்லோரும் சினிமாவை நோக்கி வருகிறார்கள். பலரும் தொழிலதிபராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.‌ இதில் இலக்கை நோக்கி பயணிப்பவர் பலர். ஆனால் சென்றடைபவர் சிலர்தான். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள்தான் சென்றடைகிறார்கள். என்னுடைய மகன் இந்தத் துறையில் இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிதான். நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும் ஸ்டில்ஸ் ரவியின் தொழில் பக்திதான் காரணம். அவர் ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் அக்கறை காட்டுபவர்.  அவரிடம் உதவியாளராக பணியாற்றிய போதும் நடிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஆர்வத்தை கைவிடவில்லை. இதனால் அவரிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். பிறகு அவரை சமாதானப்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.

'ராஜா ராணி' படம் நடிக்கும் போது நான் ஃபோட்டோகிராஃபர். ஏ.வெங்கடேசன் சார், ரூ.75000 சம்பளம், எனச் சொல்லி ஃபோட்டோகிராபராக கூப்பிட்டார். அதற்கு நான் சத்யராஜ், நயன்தாரா படத்தில் நடிக்க போறேன் எனச் சொல்லி மறுத்துவிட்டு, ரூ.3500 சம்பளத்திற்கு ராஜா ராணியில் நடித்தேன். அப்போது அட்லியிடம், குறும்படத்திலே ரூ.5000 கொடுக்கிறாங்க, நீங்க வெறும் ரூ.3500 தான் தரீங்களே என்றேன். உடனே காசாளர் நம்பிக்கையுடன் இந்தப் படம் வெளியான பிறகு நிறைய சம்பளம் வாங்குவதாக சொன்னார். அதன்படியே வாங்குகிறேன். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யூகி சேது தான், 'பந்தா' பாண்டியாக இருந்த என்னை 'ராஜா ராணி' பாண்டியன் என மாற்றினார். இதற்காக யூகி சேதுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.'' என்றார்.

சார்ந்த செய்திகள்