Skip to main content

"உன்னை நான் கைத்தூக்கி விடுகிறேன் என்றார்" - கமலை சந்தித்த பின் ஓட்டுநர் ஷர்மிளா பேட்டி

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

coimbatore driver sharmila about kamal

 

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா, அம்மாவட்டத்தின் தனியார் பேருந்தின் முதல் பெண் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றார். அண்மையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். மேலும் ஷர்மிளாவிற்கு கைக் கடிகாரத்தைப் பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். 

 

இதனைத் தொடர்ந்து கனிமொழி வருகைக்குப் பின், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கும் பெண் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அவரது பணியை ஷர்மிளா விட்டதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாகப் பேருந்து உரிமையாளர் தரப்பு வைத்த குற்றச்சாட்டால் அவரது பணி பறிபோனது என்ற தகவலும் வெளியானது. பின்பு இதனை அறிந்த கனிமொழி, ஷர்மிளா வேலை இழந்தது குறித்து விசாரித்து அவருக்கு வேறு நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவது குறித்து உறுதியளித்தார். அதன்படி அவருக்கு உக்கடம்-போகம்பட்டி வரை செல்லும் தனியார் பேருந்து நிறுவனமான கிருஷ்ணா நிறுவனம் ஓட்டுநர் பணி அளித்துள்ளது. 

 

இது அங்கு பரபரப்பை கிளப்ப, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து கார் ஒன்றை பரிசளிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து இன்று கார் சாவியை வழங்கியுள்ளார். அதைப் பெற்ற ஷர்மிளா பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "கமல் சார் கையில் சாவி வாங்க ஆசைப்பட்டேன். அது நடந்துவிட்டது. சாவி கொடுத்துவிட்டு சில அறிவுரை வழங்கினார். கார் நாளைக்கு டெலிவரி எடுக்க போறோம். தொழில் முனைவோராக வர வேண்டும் என்றுதான் கமல் சார் எனக்கு கொடுத்தார். ‘உன்னை நான் கைத்தூக்கி விடுகிறேன்; நீ உன்னை போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார். 

 

நிறைய பேர் நிறைய சொல்றாங்க. எல்லாமே நெகட்டிவா தான் இருக்கு. பாசிட்டிவா எதுவுமே இல்லை. ஆனா எனக்கு ஒரு சில பாசிட்டிவான மக்கள் இருக்குறாங்க. அன்றைக்கு, உங்க புள்ளைய கூப்பிட்டு வெளியே போ... என்று ஓனர் சொன்னார். எங்க அப்பாவை அவமரியாதையா பேசினது எனக்கு சங்கடமா இருந்துச்சி. அதனால் வெளியே வந்துட்டேன்" என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மாண்ட பட்ஜெட் -  ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள் 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இப்படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. 

kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படம், கல்கி  2898 ஏடி வெளியாகவுள்ள அதே மாதத்தில் வெளியாகவுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 மற்றும்  கல்கி 2898 ஏடி இரு படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது