Skip to main content

2023 ஆஸ்கருக்கான பட்டியலில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய 2 இந்தியப் படங்கள்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

Chhello Show, rrr are selected in 95th Oscars Shortlists

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படமும் படக்குழு சார்பில் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'காந்தாரா' படமும் இறுதி நேரத்தில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு ஆங்கில ஊடகத்தில் தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில், நாமினேஷனுக்கு முந்தைய இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ள சிறந்த ஆவணப்படம், ஆவணக்குறும்படம், சர்வதேச திரைப்படம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், இசை (பின்னணி இசை), இசை (பாடல்), அனிமேஷன் குறும்படம், ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கான பட்டியலை ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

 

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'செல்லோ ஷோ' படம் இடம் பெற்றுள்ளது. சிறந்த பாடல் [Music (Original Song)] பிரிவில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் இடம் பெற்றுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து 95-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை அடுத்த மாதம் 24 ஆம் தேதி (24.01.2023) அறிவிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்