Skip to main content

இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த பிரபல நடிகர் 

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

actor vignesh loses crores Iridium scam

 

90களில் வெளியான 'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளில் பணத்தை ஏமாந்துள்ளார். இதனையடுத்து இரிடியம் மோசடி கும்பலிடம் தான் இழந்த ரூ. 1.81 கோடியை மீட்டு தருமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "நான் 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். இதை தவிர சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். இதையடுத்து அவர் இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்றதாகவும், அதன்மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் கூறினார். ராம் பிரபு இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக கூறினார். அதில் முதலீடு செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்த தொழில் செய்வதாகவும் சொன்னார்கள். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். 

 

இதையடுத்து அவர் குறித்து விசாரித்த போது என்னைப் போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோன்று பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்