Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #21

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

maayapura part 21

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

பெண் என்பவள் மாபெரும் சக்தியாகத் திகழ்கிறவள். மன வலிமை மிக்கவள். தியாகச்சுடர்... என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், அவள் பெரும்பாலும்  உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கக் கூடியவள் என்கிற சிறு பலவீனமும் அவளுக்கு உண்டு.   

 

சங்கவியும் அப்படிதான். அசோக் கோபப்பட்டதும் தன் கணவன் ஆணாதிக்கம் மிக்கவன் என்று நினைத்தாள்.  அசோக் குடும்பம் தன்னை அதிகமாக வேலை வாங்கும் போதெல்லாம், மாமா குடும்பத்தினர் கடுமையாக பேசும்போதெல்லாம், அதை அசோக், மௌனமாகக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்குத் தோன்றாத அவனைப்பற்றிய ஆணாதிக்க பிம்பம், இப்போது மட்டும் ஏன் சங்கவிக்குத் தோன்றியது?  தான் அடிமையாக இருக்கிறோமோ? என்ற எண்ணம் பொருளாதார சுதந்திரத்தில் தலையிடும் போது மட்டும் ஏன் அவளுக்குத் தோன்றியது? இது சங்கவியின் தவறல்ல.

 

காலம் காலமாக பெண்கள் தங்கள் சிறு தேவைகளுக்கும் பொருளாதார ரீதியில் ஆண்களைச் சார்ந்தே இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமூக அமைப்பே இங்கு கால காலமாக இருந்து வந்திருக்கிறது.  இதில் அதிகம் பாதித்தவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள்தான். விவசாயக் கூலியாக இருக்கும் பெண்களுக்கும் உயர்மட்ட வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் இந்த நிலை இருந்ததில்லை. அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தது. இதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தான், கணவரிடம் அனைத்திற்கும் கையேந்தி நின்று கொண்டும், கணக்கு சொல்லிக்கொண்டும் இருக்க நேர்கிறது. அதிலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும்போது, மனைவியால் தான் அது ஏற்பட்டது என்ற கணவரின் குற்றச்சாட்டையும், வாழைப்பழம் பிறர் குத்தும் ஊசியைச் சத்தமில்லாமல் விழுங்குவது போல அவர்கள் விழுங்கிக்கொண்டு, பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அத்தகைய பெண்களுக்கு வழிகாட்டும்  போராளிகளான,  பெரியார், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் கல்வி என்னும் விடிவெள்ளியை  பெண்களின் வாழ்வில் ஏற்றிவைக்கப் போராடினார்கள்.

 

கல்வியின் மூலம் கிடைத்த பொருளாதார சுதந்திரம் தான் இப்போது, பெண்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் போராளியாகவும்  மாற்றிவருகிறது. பல பிறவிகளாய் ரத்தத்தில்  ஊறிய அடிமைத்தனம் என்ற நிலையை அது மாற்றிவருகிறது. அதனால்தான் தன்னைப் படித்து வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னதும் சங்கவிக்கு மனசு வலித்தது. வலியுடன் தான் அந்த அறைக்குள் வந்தாள். 

 

அசோக் "என் மீது கோபமா" என்று கேட்டுக்கொண்டே சங்கவியின் அருகில் வந்தான். அருகில் நிற்கும் அசோக்கின் கையில் இருந்த பேப்பரை பார்த்ததும் சங்கவி லேசாக அதிர்ச்சியானாள்.  அது ஒரு பத்திரத்தின் ஜெராக்ஸ் போல இருந்தது. எனினும், கோபத்தை ஓரம்கட்டிவிட்டு...

" என்னங்க இது" என்று ஆச்சரியமாக கேட்டாள். "நிலப்பத்திரத்தின் ஜெராக்ஸ்" 

"எந்த நிலப் பத்திரம்? என்ன ஜெராக்ஸ்? அது ஏன் உங்கக் கிட்ட இருக்கு?” என்று   கேள்விகளால் கட்டிடம் கட்டினாள் சங்கவி.

"இரண்டு நாள் முன்னாடி காசி செட்டியாரைப்  பார்த்தேன். பாத்திரம் வாங்கும் போது. மாமா அறிமுகப் படுத்தினாரே அவரைத்தான் பார்த்தேன்" என்று அசோக் சொன்னதும் , ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கும் என்று கவனமாக கேட்டாள்  சங்கவி.

" அப்பா உனக்கு சீர் செய்வதற்காக அவருடைய நிலத்தை செட்டியாரிடம் தான் அடமானம் வைத்திருக்கிறாராம். பணம் வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டி விடுகிறேன் என்று சொல்லி இருக்கார். விவசாயத்தில் வருவது வயிற்றுக்கும் வாய்க்குமே பத்தாது. இதுல எங்க இருந்து நிலத்தை மீட்க போறாரு? உங்க அப்பாவை நினைச்சா பாவமாக இருக்கு.  எதுக்கும் இருக்கட்டும்னு அடமான பத்திரத்தை ஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்தேன்" என்று  மாமா மீது அன்பு உருக அசோக் பேசியதைக் கேட்டதும் சங்கவிக்கு அழுகையே வந்துவிட்டது.

 

சங்கவியின் கண்ணீரை பார்த்ததும் "விடு...சங்கவி நாம் ஏதாவது உதவி செய்து நிலத்தை மீட்டு எடுப்போம்" என்று ஆறுதலாக பேசினான். 

 

அசோக்கின் அன்பை புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோமே என்று சங்கவி அழுததை, அப்பாவின் கஷ்டத்தை நினைத்து அழுகிறாள் என்று புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினான் அசோக்.

" என்னை மன்னிச்சிடுங்க  நீங்க அப்பா அனுப்பிய அந்த பேப்பரை கிழித்து போட்டதும் உங்க மேல கோபம் கோபமாக வந்துச்சு. மாட்டுக் கொட்டகையில் உட்கார்ந்து அழுதேன்.”  என்று குழந்தை போலக் கூறிய அவள் வார்த்தைகள், அசோக்கின் நரம்புகளில் அன்பின் ராகத்தை வாசித்தது. சற்று அவள் அருகில் நெருங்கி வந்து கைகளை ஆதரவாகப் பிடித்தான். அதில் அன்பின் ஆலாபனை ஆரம்பித்தது. அசோக்கோ,

" ஏன் கிழிச்சி போட்டேன்னு புரியலையா? வீட்டில் எல்லார் எதிரிலும் நீ படிக்க போறேன்... பரீட்சை எழுதப் போறேன்ன்னு சொன்னால், உன்னை நல்லா படிம்மான்னு  உட்காரவைத்து சோறு போடப் போறாங்களா? உன்னை அதிகமா வேலை சொல்லிப் படிப்பைக் கெடுக்கப்பதற்கு என்ன எல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் பண்ணுவாங்க. அதிலும் என் பங்காளிக்கு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் உனக்கு வேலை கிடைக்காமல் பண்ண மாட்டானா? அதனாலதான் கோபப்பட் மாதிரி நடிச்சேன்” என்று சங்கவிக்கு ஆதரவாகப் பேசினான்.

"அப்ப நான் குரூப் ஃபோர்  பரீட்சை எழுதவா?" என்று அப்பாவியாகக் கேட்டாள். 

"அப்பா கடன் அடைத்து நிலத்தை மீட்கனும்னா,  நீ பரீட்சை எழுது" என்று அசோக் பெருந்தன்மையுடன் சொன்னான்.

" பேசிப் பேசியே பாவக்காய் பந்தலில் பால் வடிய வச்சாளாம், ஆடி ஆடியே அரளிப் பூ செடியில் தேன் வடிய வச்சாளாம் வித்தாரக்கள்ளி" ங்கற கதையா  உன் மகனை மயக்கி, கல்யாணம் பண்ண மாதிரி, தலையணை மந்திரம் ஓதி உன்னையும் உன் மகனையும் பிரிக்கப் போறாள். பாய் எடுக்கறேன்னு  ரூமுக்கு போனவள் இன்னும் வரவில்லை பாரு" என்று கொதிக்கிற எண்ணெயில் வடையை போட்டாள் அண்ணி நாகம்மா. எண்ணெயில் போட்ட  வடை புசுபுசுன்னு கிளம்பியது.

"த...சங்கவி  இன்னுமா பாய் எடுத்துட்டு வர்ரே?’, என்று குரல் கொடுத்தார் தங்கம்.

"இதோ எடுத்துட்டு வரேன்த்தே" என்று பதில் குரல் கொடுத்துவிட்டு,

" மாமா உங்க அம்மா கூப்பிடறாங்க. நான் பிறகு வர்றேன்" என்று சொல்லிவிட்டு பாயை எடுத்துக்கொண்டு ஓடினாள். சங்கவி பாயைப் போட்டு விட்டுப் படுத்ததும், தங்கத்தின் காலை அழுத்தி விட்டுத் தூங்க வைப்பது சங்கவியின் வேலையாக இருந்தது. இன்றும் அப்படியே தங்கத்தின் காலை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனம் அசோக்கை சுற்றியே இருந்தது.

"பெண்கள் எப்போதும் ஒரு விஷயத்தை அந்த நிமிடத்தில் வைத்து முடிவெடுக்க கூடியவர்கள். ஆண்கள் அந்த விஷயத்தின் விளைவுகளை சிந்திக்க கூடியவர்கள். நகை கடைக்குச் சென்று நகை வாங்கும்போது கூட, நகையை வாங்கி தனக்கு நல்லா இருக்கான்னு போட்டு பார்ப்போம். அதுவும் கல் வைத்த நகை மட்டுமே  ஆசைப்படுவோம். ஆண்கள் கல் வைத்த நகையை விரும்ப மாட்டார்கள் காரணம் அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைக்க முடியாது. நகையில் கல்லுக்கு எடையும் கூடும். அதுமட்டுமில்லாமல் கல்லுக்கும்  தனியாக பணம் வாங்குவார்கள். இதையெல்லாம் ஆண்கள் யோசிப்பார்கள். பெண்கள் நாகரீக நகையாக வேண்டும் என்று மட்டுமே யோசிப்பார்கள். அதனால்தான் ஆண்கள் குடும்ப தலைவராகப் பொறுப்பேற்றார்கள் போலிருக்கிறது. என்றெல்லாம் அவள் மனம் தாறுமாறாய்  யோசித்தது.

 

இதுமாதிரிதான் அசோக்கும் யோசித்து அந்த பேப்பரை கிழித்து போட்டான். நான் தவறாக நினைத்துவிட்டேன் என்று மனதுக்குள் மன்னிப்பு கேட்டாள்.

 

பெண்களின் அன்புச் சுனை நீர் போல. திடீர் திடீரென்று ஊற்றெடுக்கும். சங்கவிக்கு அசோக்கை இப்போதே மீண்டும் பார்க்கவேண்டும் போல் தோன்றியது.

" அம்மா தண்ணீர் குடித்துவிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் ஓடினாள். அசோக் படுத்துக்கொண்டு பட்டுக்கோட்டை பிரபாகரின்  பரத் − சுசீலாவை நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். உள்ளே வந்த சங்கவி

"மாமா நெசமா நான் பரீட்சை எழுதினால் வேலை கிடைக்குமா?" என்று ஆர்வமாக கேட்டாள்.

"வேலை கிடைக்கிற மாதிரி அறிவுபூர்வமாக எழுதினால் கிடைக்கும் "என்று சொல்லிக் கொண்டே சங்கவியின் கைகளை பிடித்தான். அதில் ஆசை அப்பி இருந்தது. ஆனால் அவசரமாகக் கைகளை விடுவித்த அவள்...

" அச்சோ ...மாமா அத்தை விழிச்சிட்டு  இருக்காங்க கூப்பிடுவாங்க"என்று சொல்லி விட்டுத் திரும்பவும் கூடத்திற்கு வந்து தங்கத்திற்கு கால் அழுத்தி விட ஆரம்பித்தாள். .

 

ஏதோ நினைவு வந்தவளாக "அம்மா பாலுக்கு உறை ஊற்றவில்லை. ஊற்றி விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அசோக்கைப்  பார்க்க ஓடினாள்.

"மாமா ..மாமா.. வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் கொஞ்சம் எங்க அப்பாவுக்கும் தர அனுமதிப்பீங்களா?”ன்று உருக்கமாகக் கேட்டாள். அவளிடம் தாவி வந்தான். அவள் விலகி நின்றாள்.  அவளிடம் ஒருசேர எதிரொலிக்கும் பயத்தையும் ஆசையையும் புரிந்துகொண்டு புன்னகைத்தபடியே...

" சரி, பயப்படாதே. நான் விழுங்கிட மாட்டேன். உங்க அப்பா கடனை அடைத்து நிலத்தை மீட்க மாட்டியா?? என்று கேள்வியையே பதிலாக்கினான் அசோக்.

" மாமா நீங்களும் பரீட்சை எழுதலாமே" என்று அறிவாளி போலக் கேட்டாள் சங்கவி.

" அம்மா தாயே.. மகராசி இப்பவாவது நான் பியூசி படிச்சவன்னு, உனக்கு நினைவு இருக்கே" என்று கிண்டலாகக் கேட்டான் அசோக்.

" சாரி ...மாமா” என்று குழைந்து விட்டு மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.

"ஆவாரம்பூ காட்டுல பூப்பறிக்க போன பூவாத்தா பூச்சாண்டி வரான்னு பூக்காம்புல ஒளிஞ்சிகிட்டாளாங்கற கதையா" கூடத்துக்கு அறைக்கும் அளவெடுத்துகிட்டு இருக்க"என்று தனம்மா பாட்டி கிண்டலாக பேசினார். வேறு வழியில்லாமல் அங்கேயே படுத்தாள். சங்கவிக்கு மனம் சந்தோசத்தில் மிதந்தது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பெருமாள் சங்கவி கூடத்தில் படுத்து இருப்பதை பார்த்தார்.

"அடியேய்... தங்கம் வீட்டில் இருக்கிற ஆடு மாடு கோழி எல்லாம் ஜோடி சேர்க்கற பெத்த புள்ளைய தவிக்க விடற"என்று அதட்டலாக கேட்டார். 

"ஆமாம் நான் தான் கையை புடிச்சி  வச்சிருக்கேன். போறவ போய் படுக்க வேண்டியது தானே? நம்மள கேட்டா கல்யாணம் பண்ணாங்க" என்று வெறுப்பாக பேசினாள்  தங்கம்.

"சங்கவி நீ உள்ள போய் படுமா" என்று பெருமாள் கூறியதும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அறையில் படுத்தாள். சங்கவிக்கு  ஒவ்வொரு விடியலும் ஏதோ ஒரு பிரச்சினையைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தான்  விடிந்தது. விக்கிரமாதித்தன் வேதாளத்தை பிடிப்பது போல சங்கவியும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக ஏதாவது முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள். 

 

தண்ணீரில் வெண்ணையை எடுத்துவிடலாம் போல. வீட்டில் உள்ளவர்கள் மனதில் இடம் பிடிப்பது கஷ்டமாக இருந்தது. 

 

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் மணியின் மனைவிக்கு அப்படியொரு நிகழ்வு நடக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

 

விதியின் விளையாட்டை யார் அறிவார்?

 

( சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)