Skip to main content

புகழ்ச்சியை விரும்பும் கணவர்; வாழ்க்கையை வெறுத்த மனைவி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 54

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
jay zen manangal vs manithargal 54

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், புகழ்ச்சியை விரும்பும் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

ஒரு பெண் என்னிடம் வந்து அவருடைய பிரச்சனைகளை சொன்னார். அவர் சொல்லி முடித்த பிறகு எனக்கு ஹிட்லர் நியாபகம் தான் வந்தது. தீவிரமான ஹிட்லருக்கு, மற்றவர்கள் சொல்கிற புகழ்ச்சியை விரும்பக்கூடியவர். இதுவும் ஒரு நார்ஸிஸ்ட் மனநிலை தான். இப்போது இந்த பெண்மணி பேச ஆரம்பிக்கிறார். கணவரிடம் இருக்கும் தவறை தெரிந்துக்கொண்டாலும், அதை கணவரிடம் சொல்ல முடியாது. தவறை சுட்டிக்காட்டினால், தனக்கு கிடைக்கும் அத்தியாவசியமான பொருட்களுக்கு கூட சண்டை போட வேண்டியிருக்கும். ஒருவேளை கணவரை பற்றி புகழ்ந்தால், அவரிடம் இருந்து சொத்தை கூட எழுதி வாங்கிக்கொள்ளலாம். அந்த மனநிலைக்கு தன்னால் ரொம்பவும் போக முடியவில்லை. எவ்வளவு நாள்கள் தான் கணவரிடம் நடிப்பது? அதனால் அவரை விட்டு பிரிய முடிவு செய்திருப்பதாக தான் அவர் என்னிடம் சொன்னார். 

கணவரை அழைத்து வருமாறு கேட்டேன். அதற்கு அந்த பெண், கணவர் வரமாட்டார் என்றார். அதற்கு நான், தன்னை சரி செய்துகொள்வதற்கு தான் கவுன்சிலிங்கிற்கு சென்றேன். அப்போது அவர் கணவரை பற்றி கேட்டபோது, உங்களை பற்றி நிறைய சொன்னேன். இப்படிபட்ட ஆளை உடனடியாக பார்க்க வேண்டும் என்று கவுன்சிலர் கூறினார் என்று கணவரிடம் சொல்லுங்கள் என்றேன். அதன்படி, கணவர் வந்துவிட்டார். மனைவியிடம் சொல்ல சொன்ன அனைத்தை விஷயத்தை பற்றியும் அவரிடம் பேசி அவரை பற்றி புகழ்ந்து பேசினேன். அவர் பெரும் மகிழ்வோடு, அந்த விஷயத்தை பற்றி ரொம்ப நேரம் அவரே புகழ்ந்து பேசிகொண்டிருக்கிறார். 

அவரை பற்றி நான் புகழ்ந்து பேச பேச, ஒரு கட்டத்தில் தன்னிடத்திலும் குறைகள் இருக்கும் அதையும் சொல்லலாம் என்றார். குறைகளை சொல்லுங்கள் என்று சொன்னால், நான் இன்னும் புகழ்ந்து பேசுவேன் என்பது அவருடைய கணிப்பு. ஆனால், மீண்டும் அவரை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில், நான் பாராட்டியது அவருக்கு நிறைவடைந்து, தன்னிடம் இருக்கும் குறைகளையும் கூறுமாறு கேட்டார். அப்படி அவர் சொல்லும்போது, நான் எழுந்து நின்று, ‘ஹெயில் ஹிட்லர்’ என்று சொல்லி அமர்ந்தேன். அவருக்கு புரியாமல் திகைத்து எதற்காக இதை சொல்கிறீர்கள்? என்று கேட்டார்.  அந்த நாடு முழுவதும் பேசும்போதும், முடிக்கும் போதும் ஹெயில் ஹிட்லர் என்று சொல்ல வேண்டும். நாடு முழுக்க நம்மை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஹிட்லருக்கு இருக்கும் என்று சொல்லி அமைதியாக இருந்தேன். அவரும் அமைதியாக இருந்தார். இந்த நிலையில், அவருக்கு நார்ஸிஸ்ட் என்ற மனநிலை கொஞ்ச கொஞ்சமாக உடைய ஆரம்பிக்கிறது. 

இவ்வளவு நேரம் பாராட்டிய பிறகு தான் குறைகளை சொல்லுமாறு கேட்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றேன். பொதுவாக மற்றவர்களிடம் நான் என்னை பற்றி பேசும் போது எதில் நான் சரியில்லை என்பதை தான் முதலில் பேச ஆரம்பிப்பேன் என்று அவரிடம் கூறிய பிறகு மீண்டும் அமைதியாகவே இருந்தார். அப்படியென்றால், நான் புகழ்ச்சியை விரும்புபவன் என்று நீங்கள் சொல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நான், அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை, ஹிட்லர் எப்படி இருந்தார் என்றும், நான் எப்படி இருந்தேன் என்றும் தானே சொன்னேன் என்று அவரிடம் கூறினேன். மற்றவர்கள் தன்னை பற்றி புகழ்ந்து பேசும் போது தனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. நீங்கள் சொல்வது கொஞ்ச கொஞ்சமாக புரிகிறது சார் என்றார். கடைசியாக உங்களுடைய தவறை சொன்னது யார் என்று கேட்டதற்கு ரொம்ப நேரம் யோசிக்கிறார். மற்றவர்கள் புகழ்ந்து பேசினால் தான் சரியாக வாழ்வதாக நினைப்பு வருகிறது சார் என்றார். இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் தனித்தன்மையுடையவர்கள். பெஸ்ட் என்றே விஷயமே இந்த உலகத்தில் இல்லை. அவரவர் வாழ்க்கையில் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் சரியும் இருக்கிறது, தவறும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி தான், மனிதன் தன் நிலையை உணரவைக்கும். அதற்காக அந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். மற்றவர்கள் தன்னை பாராட்டுவதால் தன்னிடம் இருந்து நிறைய பேர் ஆதாயம் பெறுகிறார்கள் என்றார். மன்னரை பற்றி புலவர்கள் புகழ்ந்து பேசி பொற்காசுகள் பெறுவதை போல், உங்களை பற்றி புகழ்ந்தால் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் அவர்களுக்கு செய்கிறீர்கள். இது தான் மன்னர் மனநிலை என்று சொல்லி மீண்டும், ‘ஹெயில் ஹிட்லர்’ என்றேன். தன்னிடம் நன்றாக பேசியும், புகழ்ந்து பேசியும் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது சார் என்று கூறினார். அவருடைய இழப்பை பற்றி சொல்லும்போது தான் அவருடைய மனநிலை என்ன என்பது அவருக்கு புரிகிறது. இதோடு அந்த கவுன்சிலிங் முடிந்தது. தான்தான் சரி என்ற மனநிலையில் உள்ளவரிடம் வாக்குவாதம் செய்வதை விட, இப்படி நகைச்சுவையாக மாற்றி பேசுவது கைக்கூடும்.