Skip to main content

அப்பா மைதானத்தில் கூலித்தொழிலாளி, மகன் மைதானத்தின் நாயகன்! கிறிஸ்டியானோ ரொனால்டோ | வென்றோர் சொல் #21

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Cristiano Ronaldo

 

கதவைத் திறந்தால் அதன் இடுக்கில் ஒளிந்திருந்த கரப்பான் பூச்சி எவ்வளவு வேகம்கொண்டு ஓடுமோ, அந்த அளவிற்கு சுறுசுறுப்பான 15 வயது நிரம்பிய பையன் அவன். அவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து உட்கார வைத்து இருந்தனர். எதிரே மருத்துவர் அமர்ந்திருந்தார். மருத்துவர் என்ன சொல்ல இருக்கிறாரோ என்ற பதற்றத்துடன் அவன் பெற்றோர் அருகே அமர்ந்திருந்தனர். உங்கள் குழந்தைக்கு இதயத்துடிப்பு சீராக இல்லை. இது அரிதாக நடக்கக்கூடியது. ஒன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் உறுதியாகக் குணமாவான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை, மரணம் கூட நேரலாம் என்றார் மருத்துவர்.

 

அந்தச் சிறுவனின் பெற்றோர் பதறினர். இல்லையென்றால் இன்னொரு வழி இருக்கிறது. வாழ்க்கையில் கடைசி வரை வேகமாக ஓடுவதோ, விளையாடுவதோ கூடாது என்றார். பெற்றோருக்கு இரண்டாவது கூறியது எளிமையானதாகவும், நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் அந்தச் சிறுவனுக்கு முதலில் கூறியது தான் பிடித்திருந்தது. என்னால் கால்பந்து விளையாடுவதை நிறுத்த முடியாது. அறுவை சிகிச்சை செய்யலாம் என்று தயாராகினான். அந்தச் சிறுவன், இந்நூற்றாண்டில் கால்பந்து உலகு கண்ட மகத்தான ஆளுமைகளில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

 

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மேடிரா தீவில் தோட்ட வேலைகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் ரொனால்டோ. தந்தையின் வருமானம் அன்றைய பொழுதில் வயிற்றைக் கழுவ சரியாக இருக்கும். சில நாட்களில் அதற்கே சிக்கல் ஏற்படும் நிலையும் உண்டாகும். பின்னாட்களில், அவர் தந்தைக்கு கால்பந்து கிளப்பில் உதவியாளராக வேலை கிடைக்கிறது. அந்த கிளப்பிற்கு சொந்தமான மைதானத்தைப் பராமரிப்பது, அந்த கிளப் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு உதவியாளராகச் செயல்படுவதுதான் அவரது வேலை. தந்தையோடு அவ்வப்போது கிளப் மைதானத்திற்குச் செல்லும் ரொனால்டோவிற்கு கால்பந்து மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. தெருக்களில் காலி பாட்டில்களை எட்டி உதைத்து விளையாடித் திரிகிறான். ஒரு கட்டத்தில் ஈர்ப்பு ஆர்வமாக மாற, வீட்டில் உள்ள பழைய துணிகளை ஒன்று சேர்த்து பந்தாக உருட்டி உதைத்து விளையாடுகிறான்.

 

ரொனால்டோ அப்பா, தன்னுடைய மகனுக்காக கிளப்பில் பேசி விளையாட அனுமதி வாங்குகிறார். வீட்டில் கிடந்த ஒரு கிழிந்த ஷூவை மாட்டிக்கொண்டு முதல் முறையாக மைதானத்தில் கால் வைக்கிறார். ரொனால்டோ ஆட்டத்திறன் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்த, அவர் மீது பொறாமை கொண்ட சிலர் அவனை சீண்ட ஆரம்பிக்கின்றனர். ரொனால்டோவின் தந்தை அவர்களுக்கு உதவியாளர் என்பதால், ரொனால்டோவை 'எடுபிடியின் மகன்' என்கிற தொனியில் ஏளனம் செய்ய ஆரம்பிக்கின்றனர். அவருக்குச் சரியாக 11 வயது இருக்கும் போதே அவருக்குள் உள்ள கால்பந்து வீரனை அங்கிருந்த அனைவரும் அடையாளம் கண்டுவிட்டனர். 12 வயதில் பிரபல எஸ்.சி.பி கிளப் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதில், பங்கெடுப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார். 14 வயதில், தன்னைக் கேலி செய்த பள்ளி ஆசிரியர் மீது நாற்காலியை எறிந்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறார். அதன்பின் கால்பந்து மட்டும்தான் அவரது வாழ்க்கை என்றானது.

 

"நான் வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன். என் வீட்டில் எந்த வசதி வாய்ப்பும் கிடையாது. மற்றவர்கள் வீட்டில் நடப்பதைப் போல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கூட எங்கள் வீட்டில் பெரிய அளவில் இருக்கவில்லை. என் அப்பா அவர் வேலை பார்த்த மைதானத்திற்கு என்னை அழைத்துச் செல்வார். அதுவரை தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு, அங்குள்ளவர்கள் விளையாடுவதைப் பார்க்கும் போது கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமானது. மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே எனக்குள் இருந்த திறமையை நான் கண்டுபிடித்துவிட்டேன். மற்றவர்களை விட நான் மிகவும் ஒல்லியாகவும், சிறியவனாகவும் இருந்ததை அனைவரும் குறையாகக் கருதினார்கள். மற்றவர்களை விட நாம் பின் தங்கியிருப்பது குறையல்ல. அவர்களை விட நாம் கடினமாக உழைத்தால் அதை நிவர்த்தி செய்துவிடலாம் என்று எனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

 

அதைச் செய்யவும் தொடங்கினேன். என் கனவுக்காக கடினமாக உழைக்கவும், அதற்காக தியாகம் செய்யவும் மட்டும் தான் எனக்குத் தெரியும். 12 வயது சிறுவனாக நான் இருக்கும் போதே எனது லட்சியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன். என் வாழ்க்கையில் அது மிகவும் கடினமான காலம். ஆனால் அதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். அதன்பின் என் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக 15 வயதில், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதா அல்லது கால்பந்தைக் கைவிடுவதா என்று முடிவெடுக்க வேண்டிய துயர்மிகு நிலைக்கு ஆளானேன். துணிந்து முடிவெடுத்தேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன்...".

 

இன்று உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவிற்கு உண்டு. பணம், புகழ்ச்சி எதையும் தேடி ரொனால்டோ சென்றதில்லை. "வாழ்க்கையில் புதுமை வேண்டும். தினந்தோறும் சவால்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். சவால்கள் நிறைந்த வாழ்க்கைதான் நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும்" என அடிக்கடி நேர்காணலில் கூறுவார். அவரது கடின உழைப்பும், தனித்துவமாகக் களமாடும் முறையும் அவருக்கான அங்கீகாரத்தை அவர் காலடியில் கொண்டு வந்து குவித்தன.

 

Ad

 

ரொனால்டோ களத்தில் மணிக்கு 33 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறமை வாய்ந்தவர். கோல் போடுவதற்காக புவியீர்ப்பு விசை கோட்பாட்டை பொய்யாக்கும் வண்ணம் அந்தரத்தில் அவர் எகிறிக் குதிப்பதையெல்லாம் இதுவரை பிற வீரர்கள் முயற்சித்தது கூட கிடையாது. கால்பந்து விளையாட்டில் உயர்ந்த விருதாகக் கருதப்படும் 'தங்கக் காலணி' விருதை இதுவரை நான்கு முறை வென்றுள்ளார். உலக அளவில் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் பட்டியலில் ரொனால்டோ முக்கியமானவர். இன்று அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ஒரு நிறுவனத்தை விளம்பரப்படுத்தி ஒரு பதிவு போடுகிறார் என்றால் அதன் மூலம் அவர் ஈட்டும் வருவாய் $9,75,000 அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் 7 கோடிக்கும் அதிகமாகும். மூன்று வேளை உணவிற்கே வழி இல்லாத குடும்பத்தில் பிறந்து, இன்று வெறும் ஒரு பதிவு போடுவதன் மூலம் விரல் சொடுக்கிடும் நேரத்தில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார் என்றால் அதற்கு, கனவினை நோக்கிய துல்லியமான உழைப்பினைத் தவிர வேறெந்த காரணமும் இருந்து விட முடியாது.

 

முதல் முறை மைதானத்தில் களமிறங்கும் போது, கிழிந்த ஷூவோடு இறங்கி, எடுபிடியின் மகன் என்ற வசை மற்றும் இழிசொல்லைக் கடந்து, இதய அறுவை சிகிச்சையில் வென்று, இன்று உலகம் கொண்டாடும் ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார் என்றால் அவரது வாழ்க்கையில் நமக்கு எவ்வளவு படிப்பினைகள் இருக்கிறது என்று பாருங்கள்! கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.