Skip to main content

"நல்லா தூங்குவேன், அவர பாக்க ஆச்சரியமா இருந்தது" - சதத்திற்கு பிறகு அஸ்வின்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

ashwin

 

இந்தியா-இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 329 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா சதமடித்து 161 ரன்கள் குவித்தார். ரஹானே, ரிஷப் பந்த் அரைசதமடித்தனர். இதன்பிறகு ஆடிய இங்கிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சை, குறிப்பாக அஸ்வின் பந்துவீச்சில் சிக்கிச் சிதறியது.

 

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் அந்த அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 195 ரன்கள் முன்னிலையோடு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. இருப்பினும் விராட், அஸ்வின் இணைந்து ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். கோலி பொறுமையாக ஆட, அஸ்வின் அதிரடி காட்டினார். பிறகு, கோலி அரைசதமடித்து ஆட்டமிழக்க, அஸ்வின் அபாரமாக விளையாடி சதமடித்தார். இதனால், அணியின் ஸ்கோர் 286-ஐ எட்டியது.

 

இதனையடுத்து 482 ரன்கள் எடுத்தால் வெற்றி இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இப்போட்டியில், இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், மைதானமும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால், இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

 

இந்தநிலையில், இன்றைய ஆட்டநேர முடிவிற்குப் பிறகு பேசிய அஸ்வின், "இரவு முழுவதும் நன்றாகத் தூங்குவேன், அதைமட்டுமே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது நல்லதொரு நாளாக அமைந்தது. நான் விக்ரம் ரத்தோருடன் (பேட்டிங் பயிற்சியாளர்) பயிற்சி பெறுகிறேன். கடந்த நான்கு, ஐந்து போட்டிகளில் நான் பேட்டிங் செய்த விதத்தில், அவருக்கும் பங்குண்டு. சிராஜோடு பேட்டிங் செய்தபோது த்ரில்லாக இருந்தது. நான் சதமடித்துபோது அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. போட்டியைக் காணவந்த பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர்" எனக் கூறினார்.

 

 

Next Story

கிரிக்கெட் வீரர் பின்னணி குரலில் வெளியான ஜி.வி பிரகாஷ் பட ட்ரைலர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்பு கள்வன் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு வைரமுத்து, வசந்தபாலன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டியர் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிரித்விராஜ் என மூன்று பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷே இசையமைத்துள்ளார். 

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பிண்ணி குரல் கொடுத்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவு குறட்டை விடும் நபராக இருக்கிறார். அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி காமெடி கலந்த ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது போல் அமைந்துள்ளது. இப்படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதே குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்