Skip to main content

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020
suresh raina

 

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மும்பை போலீஸார் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிளப் ஒன்றில் சோதனை நடத்தினர்.

 

போலீஸார் சோதனையில் அங்கு கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கிளப்பிலிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார். அவரோடு பிரபல பாடகர் குரு ரந்தவா மற்றும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இதுகுறித்து மும்பை போலீஸார், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக  சுரேஷ் ரெய்னாவோடு சேர்த்து 34 பேர் கைது செய்யப்படாததாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா ஆகியோர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

 

 

Next Story

சுரேஷ் ரெய்னா குறித்து சூர்யா

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
suriya about suresh raina

ஐபிஎல் தொடர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அதே பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கியுள்ளனர். 

இந்த போட்டி நேற்று (06.03.2024) மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. அப்போது சச்சின், சூர்யா, அக்‌ஷய் குமார், ராம் சரண், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் ‘நாட்டு நாட்டு...’ பாடலுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பின்பு இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கலந்து கொண்ட நிலையில், அவரை சூர்யா தனது குழந்தைகளுடன் சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சூர்யா குடும்பத்தை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் விரைவில் சென்னையில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “வாழ்நாள் முழுவதும் உள்ள மெமரிஸ் பிரதர். உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் சென்னையில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.