Skip to main content

பாகிஸ்தான் வெறி ஆட்டம்! - புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம்! 

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Pakistan won against Sri Lanka

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி இன்று தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான குசால் பெராரா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசங்கா 51 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

 

அந்த அணியில் இரு வீரர்கள் சதம் விளாசி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். அதன்படி இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் 77 பந்துகளில் 6 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடித்து 122 ரன்கள் குவித்தார். அதேபோல், சதீரா சமரவிக்ரம 108 ரன்களை விளாசினார். இலங்கை அணி மொத்தம் 50 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்களை இழந்து 344 ரன்களை குவித்தது. 

 

பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல், ஹரிஸ் ராப் 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து 345 ரன்கள் இலக்குடன் விளையாட துவங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபீக் சிறப்பாக ஆடி 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசி 103 பந்துகளில் 113 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பாபர் அசாம், 10 ரன்களும், சவுத் ஷகீல் 31 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இறுதி வரை அவுட் ஆகாமல் முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகளை விளாசி 134 ரன்கள் குவித்தார். அதேபோல், இப்திகார் அகமது 22 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

 

இறுதியில் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 348 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க இரண்டு விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பத்திரனா தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர். 

 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் 2023 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தை இன்று ஆடியதில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியது மூலம், பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் இரு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை தோல்வி அடைந்ததன் காரணமாக புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளது. 

 

 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.