Skip to main content

பந்து வீச்சில் கலக்கிய இந்தியா; உலகக் கோப்பையில் செய்த புதிய சாதனை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

India mixed in bowling A new record in the World Cup

 

உலகக் கோப்பையின் 29வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லக்னோவின் பாரத ரத்னா ஶ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 4 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 40 ரன்களுக்கு 3  விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ மறுபக்கம் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினார். அவருடன் சேர்ந்த கே.எல். ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். நன்றாக ஆடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

பின்பு கேப்டன் ரோஹித்துடன் சேர்ந்த சூர்யாவும் நிதானமாக ஆடினார். சதம் அடிப்பார் ரோஹித் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜடேஜா எட்டு ரன்களிலும், சமி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சூரியகுமாருக்கு, பும்ரா துணை நின்று ரன்கள் சேர்க்க சூரியகுமார் பொறுமையாக ஆடினார்.  அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யா குமார் யாதவ், சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 49 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் பும்ரா மற்றும் குல்தீப்பின் கடைசி கட்ட இன்னிங்ஸ் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரஷித் 2 விக்கெட்டுகளும் மார்க் வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.


பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருப்பினும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட்டும் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் சமி, ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ இருவரையும் சிறிய இடைவெளியில் அவுட் ஆக்கினார். சிறிது நேரம் பொறுமையுடன் ஆடிய கேப்டன் பட்லரை குல்தீப் கிளீன் போல்ட் ஆக்கினார். குல்தீப் வீசிய பந்து 7.2° திரும்பி இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறப்பான ஒரு பந்தாக வர்ணிக்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதியில் இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் மட்டும் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர். நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் ஆடி 87 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த வெற்றியால் இந்திய அணி உலகக் கோப்பைகளில் அதிக முறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி (58) என்ற நியூசிலாந்து அணியின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை (59) பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா (73) முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை பங்கு பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில், லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறுமுறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

 

India mixed in bowling A new record in the World Cup

 

இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 18,000 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரோஹித் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை (7) ஆட்ட நாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைகளில் அதிக முறை (9) ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரராக முதலிடத்தில் உள்ளார்.

 

- வெ. அருண்குமார்

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.