Skip to main content

ஐ.சி.சி. நம்பர் 1 பேட்ஸ்மேன்... குறைத்துமதிப்பிடப்பட்ட கம்பீர்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

முன்னாள் நம்பர் 1 பேட்ஸ்மேன், இருமுறை ஐ.பி.எல். கோப்பை, இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளின் நாயகன், மிகச்சிறந்த கேப்டன், உதவும் கரம், ட்விட்டர் ஹீரோ, சமூக ஆர்வலர், மனிதநேயமிக்கவர்... இதுபோல பல சாதனைகளுக்கும், விஷயங்களுக்கும் சொந்தக்காரர் கவுதம் கம்பீர். சச்சின், சேவாக், தோனி ஆகியோர் காலகட்டத்தில் கம்பீரின் சாதனைகள் மறைக்கப்பட்டுவிட்டன. அவரின் பங்களிப்புகள் அளவுக்கு அவரை நாம் கொண்டாடவில்லை என்பதே உண்மை.  

 

gg

 

 

2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவந்தார் கம்பீர். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் முக்கிய வீரராக இருந்தார். மற்ற சிறந்த வீரர்கள் ஏதாவது ஒரு ஃபார்மேட்டில் சரியாக ஆடமுடியாமல் இருந்தபோது, இவர் மட்டுமே மூன்று ஃபார்மேட்டிலும் சிறப்பாக ஆடிவந்தார். 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதே ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதை பெற்றார்.

 

2009-ல் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆன் ஆகியபோது இந்திய அணி தோற்றுவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், கம்பீரின் ஆட்டம் அவர்களது எண்ணத்தை தவிடுபொடியாக்கியது. 643 நிமிடங்கள், 436 பந்துகள், 137 ரன்கள். தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை காப்பாற்றினார். அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. கம்பீரின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர் கம்பீர்தான் என சேவாக் ஒருமுறை கூறியிருந்தார்.  

 

gg

 

 

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கம்பீர், தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தேவையானபோது நிதானமாகவும் ஆடுவார். எதிரணியின் பவுலர்களை எளிதாக செட்டிலாக விடமாட்டார். தன்னுடன் அடுத்த முனையில் ஆடும் வீரருக்கும் நம்பிக்கையை அளிப்பார். அணியின் தேவைக்கு ஏற்ப, தன்னுடைய ஆட்ட வடிவத்தையும் மாற்றிக்கொள்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியை காட்ட தயங்கமாட்டார். இவருடைய இன்சைடு அவுட் ஷாட்கள் மிகவும் பிரபலம். கம்பீர்-சேவாக் ஜோடி இந்தியாவின் சிறந்த பேட்டிங் இணைகளில் ஒன்றாகும். 

 

 

ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். பெரிய அளவில் பின்னணி இல்லாத அணியை வழிநடத்தி இருமுறை கோப்பையை வென்றுள்ளார். குல்தீப் யாதவ் போன்ற இளம்வீரர்களை உருவாக்கியதில் கம்பீரின் பங்கு மிகப்பெரியது. அணியின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டார். சுயநலமின்றி, அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்வார்.

 

 

gg

 

 

இளைஞர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி, அவர்களின் கிரிக்கெட் வாழ்வில் பெரும்பங்காற்றியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இக்கட்டான காலகட்டத்தில் கம்பீரின் உதவியே என்னை மாற்றியது என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் நிதிஷ் ரானா தெரிவித்திருந்தார். 

 

இந்திய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அந்த 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக அவரது பேட்டிங் சராசரி 90. தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த வீரர், நான்கு டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக 300+ ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைகளை உடையவர் கம்பீர்.

 

இலங்கை அணி 2009-ல் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்போட்டியில் 316 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சேஸ் செய்து வென்றபோது கம்பீர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 150 ரன்கள் குவித்தார். விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை பதிவுசெய்தார். ஆட்டநாயகன் விருது கம்பீருக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை அப்போது இளம் வீரரான கோலிக்கு அளித்து பெருமைப்படுத்தினார்  கம்பீர். அந்த நிகழ்வு கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த நிகழ்வாக கருதப்படுகிறது.   

 

இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் உட்பட 4,154 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள், 34 அரை சதங்கள் உட்பட 5,238 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 7 அரை சதங்கள் உட்பட 932 ரன்கள் சேர்த்துள்ளார். 

 

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், 2011-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இவரது பங்களிப்பு மிகவும் அபாரமானது. இரண்டு முறையும் அவர் ஆட்ட நாயகன் விருது பெறவில்லை. ஆனால் இருமுறையும் இந்திய அணியின் ஸ்கோர்கார்டு பார்த்தால், இவரது பங்கு எத்தகையது என்பது புரியும். 

 

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யூசுப் பதான் 15, உத்தப்பா 8, யுவராஜ் சிங் 14, தோனி 6 என மறுமுனையில் இருந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், கம்பீர் நிதானம் கலந்த அதிரடியுடன் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 157.   தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 18 ஓவர்வரை விளையாடி அணியின் ஸ்கோரில் 50 சதவீத ரன்களை எடுத்தார். மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரும் இவர்தான். 

 

 2011-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் ஓவரில் சேவாக்கும்(0 ரன்கள்), ஏழாவது ஓவரில் சச்சினும்(18 ரன்கள்) அவுட்டாக, அணி 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பொறுப்பை எடுத்துக்கொண்ட கம்பீர் கோலியுடன் இணைந்து நிதானத்துடன் விளையாடினார்.  அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது கோலி அவுட் ஆனார். பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார் கம்பீர். இந்தப் போட்டியில் முதல் ஓவரில் களமிறங்கி 42 ஓவர்வரை விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த தொடரில் மொத்தம் 393 ரன்கள் குவித்தார் கம்பீர். இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரன்கள் இந்த தொடரில் எடுத்தவர் கம்பீர்தான் என்பது கவனிக்கத்தக்கது.

 

கிரிக்கெட்டில் மட்டுமல்ல. சமூகம் சார்ந்த விஷயங்களிலும் இந்தியாவுக்காக குரல் கொடுத்துவருகிறார். அவர் சத்தீஸ்கர் மற்றும் ஜோகிராவில் இறந்துபோன சி.ஆர்.பீ.எஃப் ஜவான்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியளித்தார். ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர் (ஜி.ஜி) அறக்கட்டளை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார். சமூக பிரச்சனைகளின் போது சமூகவளைதலங்களில் தயங்காமல் தன்னுடைய கருத்தை கூறுவார். அது ராணுவம் தொடர்பாக இருந்தாலும் சரி, டெல்லியின் உள்ளூர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, டெல்லி கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தாலும் சரி, இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு குரல் கொடுப்பதாக இருந்தாலும் சரி. தன்னுடைய மனிதாபிமானத்தையும், தேசப்பற்றையும் தவறமால் பதிவுசெய்வார்.

 

2008-ஆம் ஆண்டில் விளையாட்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்றார். சமீப காலமாக இவர் பா.ஜ.க.வில் சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

கம்பீரின் சாதனைகளை நாம் பெரிய அளவில் கொண்டாடாதபோதும், அவர் தன்னால் முடிந்த அளவு கிரிக்கெட்டிலும், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான பங்களிப்புகளை அளித்துவருகிறார். சமீபகாலமாக வர்னனையாளராகவும் பங்கேற்று வருகிறார். இவர் ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகிற்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. 
 

 

 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.