Skip to main content

தோனியைக் கடுப்பேற்றி வாங்கிக் கட்டிய மணிஷ் பாண்டே! 

Published on 22/02/2018 | Edited on 24/02/2018

தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கவீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இளம் வீரர் மணிஷ் பாண்டேவுடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் விளையாடினார் மகேந்திர சிங் தோனி.

 

தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், கடைசி மூன்று ஓவர்களில் தோனி அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் முதல் பந்தைச் சந்தித்த மணிஷ் பாண்டே மிட்-விக்கெட் திசையில் அடித்துவிட்டு ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்தார். ஆனால், இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்த தோனியை அவர் கவனிக்காமல், ட்ரெஸ்ஸிங் ரூம் திசையைப் பார்த்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகிப் போனார் தோனி. உடனே, மணிஷை அழைத்து காட்டமான வார்த்தைகளில் திட்டிவிட்டு, அடுத்த ஐந்து பந்துகளில் 18 ரன்கள் விளாசினார். 

 

 

 

 

இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார் தோனி. தோனியின் 11 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் அடித்த இரண்டாவது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது முதல் 65 டி20 போட்டிகளில் ஒருமுறை கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை.

 

 

மிஸ்டர் கூல் என எப்போதும் பெருமையாக அழைக்கப்படும் தோனியின் பேச்சு கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளர்ந்து வரும் ஒரு வீரரை தோனி இப்படி பேசியிருக்ககூடாது என ஒரு சிலரும், நல்ல வேளை தோனியைக் கடுப்பாக்கி அந்த ஓவரில் ரன்களை ஏற்றிவிட்டீர்கள் மணிஷ் என வேறு சிலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Next Story

தீவிர தோனி ரசிகர் மரணம்!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Die hard Dhoni fan lost his lives in cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி விஜயா தம்பதியின் மகன் கோபிகிருஷ்ணன்(34). இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள கோபிகிருஷ்ணன் தீவிர தோனி ரசிகர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று அங்கு ஆன்லைன் தொழில் செய்து வந்துள்ளார். 

அங்கு சென்று தொழில் செய்தாலும் அவர் விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் துபாயில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், துபாயில் நடைபெறும் மேட்ச்களில் தோனி விளையாடும் அனைத்து மேட்ச்களையும் தவறாமல் பார்த்துவிடுவது வழக்கம். மேலும், இவர் தனது வீட்டை முழுவதும் மஞ்சள் நிறத்தில வண்ணம் பூசி வீட்டின் முன்புறம் தோனி படமும் பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸின் சிங்கப் படத்தையும் சுமார் ஒன்னறை லட்சம் செலவு செய்து வரைந்து வீட்டின் முகப்பில் ஹோம் ஆஃப் தோனி ஃபேன் என எழுதி பிரபலமடைந்தார். 

Die hard Dhoni fan lost his lives in cuddalore

இந்த நிலையில்,  அதிக வட்டி தருவதாக கூறிய ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவர் வசித்த வந்த கிராமத்தினர் சிலரையும் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியதால் அதை நம்பிய கிராம மக்கள் சிலர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த நிதி நிறுவனம் கிராம மக்களின் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், கோபி கிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர். இதில், கோபிகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (17-01-24) காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற கோபிகிருஷ்ணனனை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் கேட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று (18-01-24) அதிகாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கோபிகிருஷ்ணனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து பலரது கவனத்தை ஈர்த்த கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தமிழகத்தில் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
nn

கிரிக்கெட்  வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அங்கும் தோனி மீது, அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியின் அந்த பதில் மனு நீதிமன்றங்களையும், நீதித்துறையை நம்பும் மக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக வாதத்தை வைத்தது தோனி தரப்பு.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.