Skip to main content

15 வருட சோகத்தை தீர்த்துக்கொண்ட ராஜஸ்தான்; சென்னை போராடி தோல்வி

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

15 years of tragedy resolved Rajasthan; Chennai fought and lost

 

16 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடந்த 17 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.

 

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேற பின் வந்த படிக்கல், பட்லருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிக்கல் 38 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

 

தொடர்ந்து அஸ்வின், பட்லருக்கு கைக்கொடுத்து அவருக்கு இணையாக ஆட ராஜஸ்தான் அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தது. இறுதியில் ஹெட்மயர் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி போதுமான ரன்னை இலக்காக நிர்ணயித்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய பட்லர் 52 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணியில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

 

176 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் ருதுராஜ் 8 ரன்களில் வெளியேற டெவோன் கான்வே நிலையாக ஆடி ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தார். அஜிங்கியா அதிரடியாக ஆடி 31 ரன்களைக் குவித்து வெளியேறினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் கேப்டன் தோனியும் ஜடேஜாவும் இணைந்து அணியை மீட்டனர். இறுதி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோல்டர் வீசிய 19 ஆவது ஓவரில் ஜடேஜா 19 ரன்களை விளாச இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 

 

சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் 2 மற்றும் 3 ஆம் பந்துகளை தோனி சிக்ஸர்களாக்க இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. அவுட்சைட் ஆஃப்-ல் யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்தை தோனி மிட்-விக்கெட் திசையில் அடிக்க சிங்கிள் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் சீசன் துவங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வென்றது. அதன் பின் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி இதுவரை சென்னையை வீழ்த்தியது இல்லை. சுமார், 15 வருடங்கள் கழித்து ராஜஸ்தான் அணி வென்றுள்ளது. இடைப்பட்ட வருடங்களில் நடந்த 6 போட்டிகளில் சென்னை அணியே வென்றுள்ளது. 

 

சுழலுக்கு ஏற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்றைய போட்டியிலும் சென்னை அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்களை வீசி 84 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். ராஜஸ்தான் அணியிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்களை வீசி 95 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

 

 

 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.