Skip to main content

தனக்குக் கைகள் இல்லை... உலகுக்கு நம்பிக்கை தருகிறார்! - 5 நிமிட எனர்ஜி கதை 

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

கஷ்டப்பட்டு உழைத்து, ஆம் பிறரை விட சற்று அதிகமாகவே கஷ்டப்பட்டுத்தான்... பள்ளிப்படிப்பை முடித்துவிட்டாள் அவள். நல்ல மதிப்பெண். அந்த ஊர் கல்வித்திட்டப்படி மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்து பள்ளி மேல்நிலை படிப்புக்காக இங்கு மீண்டும் கஷ்டப்பட்டு சேர்ந்துவிட்டாள். சேர்த்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, என்ன கேட்டு புண்படுத்துவார்களோ என்ற எல்லா தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக சேர்ந்து முதல் நாள் வகுப்புக்காக வந்துவிட்டாள். வந்தவளுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி, வகுப்பு மூன்றாம் தளத்திலாம். பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் என்றால் பல தளங்கள் இருப்பதும், அதில் பெரும்பாலும் மேல் தளங்களை மாணவர்கள் விரும்புவதும் வழக்கமானது தானே? அதிலென்ன அதிர்ச்சி? ஏனென்றால், இவள் வழக்கமானவள் அல்ல. பிறக்கும்பொழுதே இரு கைகளும் இரு கால்களும் இல்லாமல் பிறந்தவள். தனது இரு முழங்கைகளாலேயே எழுதிப் பழகி படித்து இந்த வகுப்புவரை வந்தவள். அவளுக்குத்தான் தனது வகுப்பு மூன்றாம் தளம் என்றதும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி நீண்ட நேரமில்லை. 'ஜாரா'வுக்கு இது வழக்கமானது தான். அதுவரை வாழ்வில் அவளுக்கு எதுவும் சுலபமாக இருந்ததில்லை, போராடப் பழகியே இருந்தாள்.

 

Zara Abbas



"எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், 'உங்களின் பெரிய சவால் எது?', 'இந்த சவாலை எப்படி சந்திக்கிறீர்கள்?' என்றெல்லாம். எனக்கு என் சவால்கள் பெரிதாகத் தெரியவில்லை. இரு கால்களால் நடப்பது எப்படிப்பட்ட உணர்வாக இருக்குமென்பது எனக்கு தெரியவே தெரியாது. என் வாழ்க்கையே இப்படித்தான் தொடங்கியது. முதல் சவால் என் பெற்றோருக்குத் தான். என்னை வளர்த்தது, படிக்க வைத்தது, பிற குழந்தைகள் மத்தியில் என்னை சேர்த்தது என அனைத்துமே அவர்களுக்குப் பெரிய சவால் தான். அவர்கள் எப்படி அதைக் கடந்தார்கள் என்று தினம் தினம் நினைக்கிறேன்", ஒரு பேட்டியில் இப்படி கூறியவர் 26 வயது ஜாரா அப்பாஸ்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் இந்தப் பெண், இரு கைகளும் கால்களும் இல்லாத குறையை சற்றும் கருதாமல், தன் பள்ளிக்கல்வியில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று, அதற்காக மாநில முதல்வரிடம் தங்கப் பதக்கம் பெற்றவர். மூன்றாம் தளத்தில் வகுப்பறை என்றாலும் பெற்றோர், நண்பர்கள் உதவியுடன், முக்கியமாக தன் நம்பிக்கையால், மேலாண்மைக் கல்வியில் இளங்கலை முடித்து, பின்னர் முதுகலையும் படித்தவர். கல்விக்குப்பின் அவர் தேர்ந்தெடுத்த பணிதான் சிறப்புத் திறனாளிகளிலேயே அவரை இன்னும் சிறப்பான திறனாளியாக்கியிருக்கிறது. ஆம், ஒரு இடத்தில் இருந்து செய்யும் அலுவலகப் பணியை தேர்ந்தெடுக்காமல், தன் குறையை மீறி தான் வாழும் தைரியத்தை, நம்பிக்கையை பிறருக்கும் பரப்ப, ஒரு பயிற்சி நிறுவனத்தில் பணிநிமித்த பயிற்சியாளராக, உத்வேக பேச்சாளராக (Motivational Speaker) பணியாற்றுகிறார்.

 

zara convocation



மிகுந்த தன்னம்பிக்கை உடையவர் தான், போராட்ட குணத்தால்தான் தினம் தினம் வாழ்கிறார். ஆனாலும், அதிருப்திகளே இல்லாத தேவ பிறவியல்ல ஜாரா. "சிறப்புக் குழந்தைகள், சிறப்புத் திறனாளிகள் என்று பெயருக்கு அழைக்கும் இந்த சமூகம், அரசாங்கம், அவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு வசதிகளையும் செய்து தரவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு அது அடிப்படை தேவை. பேருந்திலிருந்து பொதுக் கழிவறை வரை மாற்றுத் திறனாளிகளுக்கென எந்த வசதியும் செய்து தராத மனிதர்களிடையே தான் அவர்கள் மீது அன்போடு நாங்கள் வாழ்கிறோம். அப்படிப்பட்ட இந்த வெளியுலகுக்கு என்னை அனுப்ப என் பெற்றோர் மிகவும் தயங்கினார்கள். அதுவும் ஒரு பெண்ணாக இருப்பதால் இன்னும் அதிகமாக பயந்தார்கள்", என்று தன் இயல்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறப்பான மதிப்பெண்களுடன் கல்வியை முடித்தபோது இவருக்கு வேலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. சமூக அக்கறை, அனைவருக்கும் வாய்ப்பு என பேசும் நிறுவனங்கள் எல்லாம், தனது 'ரெஸ்யூமே'வோடு (Resume) ஜாரா சென்றபோது ஏற்கவில்லை. "எப்படி பயணிப்பீர்கள், எப்படி கணினி பயன்படுத்துவீர்கள், எப்படி கழிவறை பயன்படுத்துவீர்கள்?' என்று என்னை சங்கடப்படுத்தும் பல கேள்விகளைக் கேட்டார்கள். பொறுமையாக எதிர்கொண்டேன். என் இலக்கு இது என நிர்ணயித்து அதை நோக்கிச் சென்றேன். இடையில் உதவியவர்களை எண்ணி மகிழ்ந்தேன். தள்ளியவர்களை, தடுத்தவர்களை, நகைத்தவர்களை மறந்தேன். பாகிஸ்தான், பெண் கல்வியில் அடைய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பெண்கள் பள்ளிக்கும் சென்று ஊக்கப்படுத்த விரும்புகிறேன்" என்கிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களை, மென்பொருள் வல்லுநர்களை, பணியாளர்களை இதுவரை பயிற்றுவித்திருக்கிறார். பார்ப்பவர்களுக்கெல்லாம் தன்னம்பிக்கையை பரப்பியிருக்கிறார். தன் உடலை அவர்களுக்கு உதாரணமாகக் காட்டி, "நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், நீங்கள் வர முடியாதா?" என்று கேட்கிறார்.      

 

zara speech



ஜாரா, மூன்றாம் வகுப்பு படித்த பொழுது, ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் உள்ளே வர, மாணவர்கள் அனைவரும் எழுந்து வணங்கினர். அப்பொழுது அவர் அருகே இருந்த மாணவி கிண்டலாக, "எல்லோரும் நின்னு வணக்கம் சொல்றோம்... நீ மட்டும் சொல்ல மாட்டியா? எந்திரிக்க முடியாதா?" என்று ஜாராவைக் கேட்டாள். அன்று வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் தன் அம்மாவிடம் அழுத ஜாரா, தன்னை பள்ளிக்கு அனுப்பவேண்டாமென்று சொன்னாள். ஆனால், இப்பொழுது ஜாரா சொல்கிறார், "எனக்குத் தெரியும், என்னை தாழ்வாகப் பேசுபவர்கள் எவ்வளவு உயரமான கால்கள் கொண்டிருந்தாலும் என் உயரத்துக்கு அவர்களால் வர முடியாதென்று".    

ஜாரா அப்பாஸ் நமக்குக் கற்றுத்தருவது, 'குறையை மற, இருப்பதை நினை. அதைக் கொண்டு உன் கனவை அடை' என்பது தான். எனக்கு கைகளும் கால்களும் இல்லாததுதான் என் ஆட்டத்துக்கான விதிமுறையென்றால், அதோடு விளையாடி ஜெயிப்பேன் என்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும், கஷடங்கள் இருக்கும். அது தான் நம் ஆட்டத்துக்கான விதிமுறை. அதோடு ஆடி வெல்ல வேண்டும், வெல்ல முடியும். அதற்கு உதாரணம் தான் ஜாரா. காரணங்கள் சொல்லிக்கொண்டே செயல்படாமல் இருப்பது வேலைக்காகாது என்பதே ஜாரா நமக்குரைக்கும் பாடம். அவரே கூறியிருக்கிறார், "உங்களால் ஒரு விஷயத்தை செய்ய முடியுமா என்ற சந்தேகம் பிறருக்கு வருவது, நீங்கள் கொடுக்கும் வாய்ப்பினால் தான். அவர்கள் சந்தேகப்படும் முன் நீங்கள் செயல்பட தொடங்க வேண்டும்" என்று.      

 

zara speech 1

        

சமூக வலைத்தளங்களில் இயங்குகிறீர்களா என்று கேட்டதற்கு, 'ஆம், இயங்குகிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்து வருந்துகிறேன். அங்கு, யார் யாரோ செய்யும் கோமாளித்தனங்களை ஹீரோயிசமாகப் பேசிப் புகழ்கிறார்கள். உண்மையில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் வேறு...' என்கிறார். ஆம், உண்மையில் ஹீரோக்கள் அவர்களல்ல, ஜாரா போன்றவர்கள் தான்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்