Skip to main content

எம்.ஜி.ஆரின் பெயர் உதயசூரியன்…

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதன் கவிஞர்களும் சம்பந்தப்பட்டால் படம் வெற்றிபெறும் என்ற அந்த இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத படத் தயாரிப்பாளர்களும் நம்பிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்துகொண்டார்.1957-இல் தி.மு.க.விற்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. இதே ஆண்டில் சக்கரவர்த்தித் திருமகன். இதில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் உதயசூரியன். வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மாவீரன் பாத்திரம். சட்டசபை தேர்தலிலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது. அடுத்து புதுமைப்பித்தன். அமைச்சரின் அடிமையான அரசனை பைத்தியக்கார வேடத்தில் வெல்லும் கதை. இது மு.கருணாநிதியின் நாடகம். 1959இல் அண்ணாவின் சிறுகதைக்கு இராம. அரங்கண்ணல் வசனம் எழுதிய "தாய் மகளுக்குக் கட்டிய தாலி'யில் நடித்தார். 1960இல் கண்ணதாசன் வசனத்தில் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று பாடினார், அச்சம் இல்லாமல்.அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் "நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தார். "ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்' என்று பாடினார். ஒருவனே தேவன் என்றது அண்ணாதான்.

mgr image

1958 இல் இவரது சொந்தப்படம் நாடோடி மன்னன்'. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் இவரது சொந்தக் கம்பெனி. இதன் சின்னமாக ஆணும் பெண்ணுமாக இருவர் தங்கள் கைகளில் தி.மு.கழகக் கொடியைப் பற்றியிருந்தனர்.ஆதித்திராவிடர் வாழ்வைச் சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் என்று துவக்கப்பாடல் பாடப்பட்டது. திராவிட இனங்களின் கூட்டு முழக்கமாகவும் ஓர் காட்சியில் ஒரு பாட்டு சேர்க்கப்பட்டது. பார்புகழும் உதயசூரியனே!என்று சுரதாவும் ஒரு பாடல் எழுதியிருந்தார். எங்கள் திராவிட பூங்காவில் மலர்ந்த வேந்தே என்று அப்பாடல் நிர்ணயித்தது.நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில் நன்மை பயக்கம் திட்டம்என்று பட்டுக்கோட்டையின் பாடலுக்குக் காதலனாகத் தி.மு.கழகத்தையும் காதலிலியாக மக்களையும் ஒப்பிட்டு உட்பொருள் கொண்டனர்.படமும் மாபெரும் வெற்றி பெற்றது. மதுரை விழாவில் முத்து, 110 சவரனில் தங்கவாளைப் பரிசளித்தார். அண்ணாவும் கருணாநிதியும் அவரைப் பாராட்டினர். இயக்கக் கொள்கை, இலட்சிய விளக்கம், மயக்கும் மடமையைக் கொளுத்தும் மார்க்கம் கலையில் காணச் செயல்முறை வகுத்தார் என்று கலைஞர் பாடினார்.

1961-இல் "அரசிளங்குமரி'க்குக் கருணாநிதி வசனம் எழுத எம்.ஜி.ஆர். நடித்தார். 1962 இல் "ராணி சம்யுக்தா' படத்தில், உதய சூரியன் மலரும் போது உனது கண்கள் மலரட்டும் என்று கண்ணதாசனின் பாடலைப் பாடினார். 1963இல் காஞ்சித் தலைவன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது அண்ணாவுக்கான பட்டமானது. கலைஞர் கதை வசனம். வடபுலத்துப் படையெடுப்பை எதிர்த்துக் கிளம்பும் கதை, பாடல். இப்படித்தான் இவரது புரட்சி வேடத்தைத் தன் படங்களில் போட்டுக் கொண்டார். ஆனால் அவ்வப்போது வேடம் கலையும், மேல் பூச்சு உதிரும். இவர் ஏழைத் தொழிலாளியாக முதலாளி களின் அநியாயத்தை எதிர்ப்பார். வில்லன்களைத் தண்டிக்காமல் மக்களிடமோ சட்டத்திடமோ ஒப்படைத்து விடுவார் அல்லது திருத்திவிடுவார். எல்லா ஆபத்துகளையும் முறியடித்து வெற்றிபெறுவார். கடைசியில் வில்லன் மகளைத் திருமணம் செய்து கொள்வார். ஆடுபகை குட்டி உறவு கதைகள்தான். எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் அடித்தட்டு நாயகனாக தான் இருக்கின்ற அமைப்புக்குள் எது நியாயம் என்று கருதப்படுகிறதோ அதையே வழங்குவதன் மூலம், நிலவும் முறையை விமர்சிப்பதற்கு மாறாக அதனை மறு உறுதிப்படுத்து வதோடு, அதை நிலைநாட்டவும் செய்கிறார். ஆகவே, இது மனம் மாறிய, சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்ட சொத்து, அதிகார உறவுகளால் ஆன உலகமே ஆகும். ஆகவே, எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் புகழ் என்பது சொத்துகள் உடைய நாயகனுக்கு உரியது.

mgr kalaingnar dmk image

அது சொத்தற்றவர்களுக்கு இல்லை. இது வீரகாவியக் கதைப்பாடல்களில் ஒருவர் காண்பதற்கு முற்றிலும் எதிர்மறையானதாகும். சுருக்கமாக, புரட்சிகரமான நாட்டுப்புற நாயகர்களைக் கருத்தியல்ரீதியாக மதிப்புக் குறைக்கப்பட்ட வடிவத்தில் எம்.ஜி.ஆர் திரையில் அடையாளப்படுத்துகிறார். எதிர்ப்பதற்குப் பதிலாக மேல்தட்டு மதிப்பீடுகளுக்கு எம்.ஜி.ஆர். எனும் நாயகன் தலைவணங்குவதன் மூலம், திரை ஊடகத்தின் மூலம் பிரச்சாரம் செய்யும் அதே சமயம் அடித்தட்டு மக்களின் போராட்டத்தின் மேல் பூச்சை மட்டும் தொடர்ந்து தனதாகத் தக்கவைத்துக் கொள்கிறார்.

 

எழுதியவர் : காவ்யா சண்முகசுந்தரம் .

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.