Skip to main content

‘விட்டமின் டி’ நீரிழிவு நோய்க்கு மருந்தாக அமையும்... ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு...!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

dd

 

இன்று புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக மக்களை அச்சுறுத்தி வரும் நோய் நீரிழிவு நோய். இதில் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்லுகிறது. இதற்கு எத்தனையோ வகையான மருந்துகள் இருந்தும், நோய் வந்தப் பிறகு கட்டுப்படுத்த முடியுமே தவிர அதனை முழுவதும் தடுப்பதற்கென இதுவரை எந்த மருந்தும் இல்லை. 

 

நீரிழிவு நோய் என்பது மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 

 

நீரிழிவு நோயில், டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உண்டு. இதில் டைப் 1 என்பது, கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைப்பாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது, கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகையான நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்லுகிறது. 

 

தற்போது இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 'வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி' எனும் அமைப்பு, டைப் 2 சார்ந்த நீரிழிவு நோய் சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் ‘விட்டமின் டி’ எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது மட்டுமே முழுமையான தீர்வு இல்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

vv

 


விட்டமின் டி எடுத்துக்கொள்வதன்மூலம் கணையத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்த முடியும் என்றும் அதனால் இன்சுலின் அதிகம் சுரக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் அதிகமாக சுரக்க தொடங்கிவிட்டால் முடிந்த அளவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் வந்துவிடும். அதனால் இந்த ஆய்வின் முடிவு விட்டமின் டி மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கிறது. மேலும் விட்டமின் டி என்பது எலும்புகளுக்கு முக்கியமானது என்பதும் இது சாதாரணமாக, இயற்கையாக சூரிய ஒளியில் இருந்தே நாம் பெறக்கூடியது என்பது இனிப்பான செய்தி.
 

 

 

 

Next Story

முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை சரிசெய்யலாமா? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Dr Suganthan Murungai Keerai diabetes

 

சர்க்கரை நோய் குறித்த பல்வேறு தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.  

 

உலகில் சர்க்கரை நோய்க்கான தலைநகரமாக இன்று இந்தியா விளங்குகிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதைவிட மன அழுத்தம் தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். நடைப்பயிற்சி என்பது மிக மிக முக்கியம். அதன் முக்கியத்துவம் காரணமாகவே அந்தக் காலத்தில் மன்னர்கள் நடந்தே நகர்வலம் சென்றனர். சர்க்கரை என்பது ஒரு குறைபாடு தானே தவிர நோய் அல்ல. இதைச் சரிசெய்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. 

 

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடலில் எனர்ஜி கூடும். கொழுப்பின் அளவு குறையும். அனைவரும் பிராணயாமம் செய்ய வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் கோவக்காய் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், மஞ்சள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாகப் பருகினால் சர்க்கரை அளவு குறையும். ஆவாரம் பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்தல் பிரச்சனை தீரும். 

 

இப்போது நாம் உணவில் அதிகமாக நெய்யை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. முருங்கைக் கீரையில் பேராற்றல் உண்டு. ஆனால் இப்போது பலரும் அதைச் சாப்பிடுவதில்லை. தொடர்ச்சியாக முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து நாம் வெளிவர வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை இதற்கு மிகவும் அவசியம். மருந்து மாத்திரைகளையும் மீறி, மன அழுத்தத்தை நாம் குறைத்தால் தான் சர்க்கரையின் அளவு குறையும். மூச்சுப் பயிற்சி இதற்கு மிகவும் உதவும்.

 


 

Next Story

காற்றின் மூலம் கூட சர்க்கரை வியாதி வரலாம்....

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடும் இந்த தினத்தில் உலகம் முழுவதும் நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 40 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, வேகமாக வளரும் நோயாக இது மாறி வருகிறது. உணவு பழக்கம், சரியான உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் சர்க்கரை வியாதி வருவதாக நாம் இவ்வளவு நாள் நினைத்திருந்தோம். ஆனால் தற்பொழுது காற்றின் முலமாக கூட இது உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

dia

 

ஆம், காற்றின் மாசு வேகமாக அதிகரித்து வரும் இந்த நிலையில், காற்றில் கலந்துள்ள மாசு காரணமாகவும் சர்க்கரை நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. p.m 2.5 எனும் மிக நுண்ணிய வகை மாசுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மிக நுண்ணிய மாசான இது நாம் சுவாசிக்கும் போது நம் நுரையீரலுக்குள் சென்று நம் ரத்தத்துடன் கலக்கிறது. இதனால் இதயம், சிறுநீரகம் மற்றும் கணையமும் பாதிக்கப்படுகிறது. இதனால் கணையம் இன்சுலினை சுரக்கும் தன்மையை மெதுவாக இழந்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை சுவாசிக்கும் போது, அவர்கள் குழந்தைகளுக்கும் வருங்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள்  அதிகரிக்கிறதாம். உடலில் உள்ள இந்த மாதிரியான மாசுகளை அகற்ற, வைட்டமின் சி மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ள உணவை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

 

இதனை தடுப்பதற்கான வழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரே வழி மாசினை கட்டுப்படுத்துவதே ஆகும். ஏற்கனவே மாசினால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போழுது இதில் சர்க்கரை வியாதியும் சேர்ந்துள்ளது மாசு சார்ந்த பிரச்சனைகளின் வீரியத்தை அதிகரிப்பதாக உள்ளது. இதற்கு பிறகாவது சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.