Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Annamalai University Distance Education Application Sale Commencement

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொலைதூரக்கல்வி இயக்ககம், இயக்குநர் சி.சந்தோஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்ககம் 2012-ல் பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி வழிகாட்டுதல் குழு மேற்பார்வையில் இயங்கி வந்து கொண்டிருந்தது. 2015-ல் யுஜிசி அதிகாரிகள், பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத் திட்டங்கள் ஏற்புடையது அல்ல என்ற அறிவிப்பு வெளியிட்டதின் பேரில் 2015-லிருந்து தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு தடை பெற்றிருந்தாலும் கூட நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து அனுமதி பெற்று சேர்க்கை நடைபெற்று வந்தது.

 

Annamalai University Distance Education Application Sale Commencement

 

2022-ல் யுஜிசி படிப்புகளைத் தொடரக்கூடாது என உறுதியான ஒரு அறிக்கையை வழங்கியது. இதனால் 2022-23க்கான கல்விச் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி 2015-ல் இருந்து 2021 வரை சேர்ந்து பயின்ற மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த தொலைதூரக்கல்வி இயக்ககம் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்காக, பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் குழுவிற்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். 

 

அந்த வகையில் சென்ற மாதம் வழிகாட்டுதல் குழு ஆய்வு செய்து தற்போது 2023 முதல் 27 பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளன. மேலும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் வேண்டியதில்லை என்பதால், சுமார் 125 பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கம் இந்த ஆண்டு முதல் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. 125 படிப்புகளில் 27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு அனுமதி பெற்று நடத்தப்படுகிறது.

 

98 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் பல்கலைக்கழகம் முன்வந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக. 4-ந் தேதி முதல் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து தொலைதூரக்கல்வி இயக்கப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 

 

தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பி.எட்., பட்டப் படிப்பு தொடங்க இந்த ஆண்டு என்.சி.டி.இ. அனுமதி வேண்டியுள்ளதால், இந்த ஆண்டு விண்ணப்பித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையான அனுமதி பெற்றுத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிளஸ்டூ முடித்தவர்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 55 படிப்பு மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி” என அவர் கூறினார்.

 

 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.