Skip to main content

கோடீஸ்வரனாக்கும் இடம்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

ஜோதிடத்தில் மனித உடலுக்கு சந்திரனே காரணமாக உள்ளார். உடலிலில் தோன்றக்கூடிய அனைத்துவகையான நோய்களைத் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் விளங்குகிறது. அதேபோல கடன் தொந்தரவுகளுக்கும் ஆறாம் பாவம் காரணமாகிறது. மனிதனுக்கு வரும் நோய்களைப் பட்டியலிலிட்டால் கணக்கில் அடங்காது. தகுதிக்குமீறி ஆசைப்படுவதும்கூட ஒருவகை நோய்தான். காரண, காரியமின்றி எதையாவது பேசுவதும் ஒருவகை நோய்தான்.

 

god



நோய்கள் அனைத்துமே ஜாதகத்திலுள்ள விதியின் கட்டங்களின்படியே வந்துசேருகின்றன. பரம்பரையாக வரும் நோய்கள், தானே தேடிக்கொள்ளும் நோய்கள், மற்றவர்களிடமிருந்து வரும் தொற்று நோய்கள், விபத்தின்மூலம் ஏற்படக்கூடிய நோய்கள், உணவின்மூலம் வரக்கூடிய நோய்கள், பிறப்பின்போதே இருக்கும் நோய்கள், தவறான மருந்துகளை உட்கொள்வதால் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றைத்தவிர வேறு நோய் வர வாய்ப்பில்லை.

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் பாவம் சுத்தமாக இருந்தால் அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆறாம் பாவத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம் அல்லது நீசம் பெற்றிருக்கக் கூடாது. அப்படியிருந்தால் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் நோய்கள் தாக்கும். ஆறில் சூரியன், சந்திரன், குரு, புதன், சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி. அதற்கு மாறாக செவ்வாய், சனி, ராகு- கேது இருந்தால் உடலில் கெட்ட நீர், கெட்ட ரத்தம் இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இராது. 

ஆறில் சூரியன் நின்றால் 

சூரிய கிரகத்திற்குரிய தலைவலி, நெஞ்சுவலி, இதய அடைப்பு ஆகியவை வரக்கூடும். இந்த ஜாதகர் அரசாங்க உத்தியோகம் அல்லது அரசு டெண்டர் மற்றும் அரசு வகைகளில் குறுக்குவழியில் சம்பாதிப்பார்.

ஆறில் சந்திரன் நின்றால்

மனதளவில் குரூரமாக இருப்பார். சிலசமயம் மன தைரியம் குறைந்து காணப்படும். நுரையீரல் பிரச்சினை வரும். கெட்ட நீர் உடலில் சேருவதும், முகம், உடல் வாட்டம் காண்பதும் ஏற்படும். அதேசமயம் உழைப்பால் உயர்வார். 

 

god



ஆறில் செவ்வாய் நின்றால்

ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் சூடு, வெப்பக்கட்டிகள், புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகளில் பாதிப்பு இருக்கும். பூமி வாங்க முயற்சி செய்வார். ஜாதகர் பெயரில் சொந்த நிலமிருக்கும். 

ஆறில் புதன் நின்றால்

மூச்சுத்திணறல், நரம்பு முடிச்சு விழுவது, நரம்பு வெடிப்புகள், கைகால்கள் முடக்கம் ஏற்படும். ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், நரம்புகளை இழுத்துப் பிடிப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த ஜாதகர் பேச்சு சாமர்த்தியத்தால் வாழ்வார். 

ஆறில் குரு நின்றால்

உடல் பருமன், உடல் சோர்வு, முகவாய்ப் பிளவு, பற்சிதைவு, கணையம், மண்ணீரல் போன்றவற்றில் பிரச்சினை வரலாம். சிலருக்கு மூளை பாதிப்பு ஏற்படலாம். சுயநினைவு குன்றாது. ஞாபகமறதி மட்டும் இருக்கும். குரு ஆறில் நிற்பதால் கோடீஸ்வரர் ஆகும் யோகமுண்டு. 

ஆறில் சுக்கிரன் நின்றால்

ஜாதகருக்கு சர்க்கரை நோய் வரக்கூடும். கெட்ட கொழுப்பினால் உடல் உபாதைகள் வரும். காசநோய், சுவாசக் கோளாறு மற்றும் கபம் கட்டுதல் ஆகிய நோய்கள் ஏற்படும். ஆனால் ஆறில் சுக்கிரன் நிற்பதால் குபேரனாகிவிடுவார். 

ஆறில் சனி நின்றால்

ஜாதகருக்கு பித்தம், உடல் கஷ்டம், என்ன நோய் என்று காணமுடியாத மர்மநோய்கள் உருவாகலாம். போதை வஸ்துக்களாலும், உணவினாலும் நோய்கள் ஏற்படும். இந்த ஜாதகருக்கு யோக தசை நடந்தால் வருமானம் உண்டு. 

ஆறில் ராகு நின்றால்

பலவிதமான உடல் உபாதைகள் உண்டு எனலாம். விஷ வண்டுகள், பாம்பு, தேள் போன்றவற்றினால் கண்டம் வரலாம். குறுக்குவழியில் பணம் வரும். பினாமி சொத்து சேரும். 

ஆறில் கேது நின்றால்

உடலில் தோல் வியாதிகள் வரக்கூடும். உடலிலில் எப்போதும் கெட்ட வாடை இருந்து கொண்டே இருக்கும். ஆறில் கேது உள்ளவர்கள் மற்றும் கேது தசை நடப்பவர்கள் மட்டும் செய்துகொள்ள வேண்டிய பரிகாரம் இங்கு தரப்படுகிறது. 

பரிகாரம்

ஒன்பது தேங்காய், 18 வாழைப்பழம், வெற்றிலை 50 கிராம், கொட்டைப்பாக்கு 18 எண்ணிக்கை, கதம்பம் ஒன்பது முழம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமையன்று காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் எமகண்ட நேரத்தில் நவகிரக சந்நிதியில் அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு முன்னதாக மூலவருக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும். மூலவருக்குச் செய்த அர்ச்சனைப் பொருட்களை மட்டும் வீட்டுக்குக் கொண்டு வரலாம்.