Skip to main content

துணைவேந்தர்கள் மாநாடு; குடியரசு துணைத் தலைவருக்கு ஆளுநர் அழைப்பு!

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

Vice Chancellors Conference Governor invites Vice President

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்  கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. எனவே கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளான 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன் மூலம் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்து வந்த ஆளுநருக்குப் பதிலாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கட்ந்த 16ஆம் தேதி (16.04.2025) நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைமை செயலாளர் நா. முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி 10 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், 12 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vice Chancellors Conference Governor invites Vice President

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியானது. அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று முன்தினம் (21.04.2025) குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதற்கிடையே ஆளுநர் ஆர்.என். ரவி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு  அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் உதகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு அளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vice Chancellors Conference Governor invites Vice President

அதே சமயம்  ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கையில், “பல்கலைக்கழங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்கிறார். பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பட்டமளிப்பு விழா மற்றும் துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்