Skip to main content

மூர்த்தியை ஒருமுறை வழிபட்டாலே போதும்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

வரலாற்றுப் புகழ்மிக்க வள்ளல் பாரி ஆட்சிசெய்த இடம் பிரான்மலை. பறம்பு மலை என்பதே பிரான்மலை என்று மருவியது. வள்ளல் பாரியின் மனம் கவர்ந்த உயர் பண்பாளர் புலவர் கபிலர். அவர் பறம்பு மலையில் பலகாலம் பாரியோடு வாழ்ந்ததால் பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது.வெள்ளை எருக்கு மலரையும் தனக்குரியதாக ஏற்றுக்கொண்ட பேரருளாளன் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மலை.இத்தகைய பெருமை வாய்ந்த பிரான்மலை ஏழாம் நூற்றாண்டில் "திருக்கொடுங்குன்றம்' என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞானசம்பந்தர் பதிகத்தால் அறிய முடிகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் "கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்' என திருவாரூர் திருத்தாண்டகத்தில், இத்தல சிவபெருமானை வந்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் "கொடுக்கிலாதானைப் பாரியே கூறினும் கொப்பாரில்லை' என வள்ளல் பாரியைப் புகழ்வதன்மூலம் இத்தலத்தை நினைவுகூர்கிறார். இங்கு வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் திருநடனம் செய்து காட்சி தந்தருளியதாக வரலாறு.
 

pranmalai temple

இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருக்கொடுங்குன்றநாதர் என்று அழைக் கின்றனர். 2,500 அடி உயரமுள்ள இந்த மலையை சங்கப்புலவர் கபிலரும் போற்றி யுள்ளார்.பாதாளம், பூமி, கயிலை என மூன்று பகுதிகளாக விளங்குகிறது ஆலயம். அதாவது மலையின் அடிவாரத்தை பாதாளமாகவும், அதற்கு மேல்பகுதியை பூமியாகவும், அதற்கும் மேலான உச்சிப் பகுதியை கயிலையாகவும் கொண்டுள்ள அமைப்பு வித்தியாசமானது. இம்மூன்று பகுதி திருக்கோவில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுந்தர பாண்டியன் திருமதில் என்று பெயர். இங்குள்ள மூன்று கல்வெட்டுகளில் "பாரீசுவரம்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரீசுவரர் என்னும் பெயர் 12 மற்றும் 13-ஆம் நூற் றாண்டுகளில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில்தான் இடம்பெற்றுள்ளது.மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் துவங்குகிறது பாதை. வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குப் பகுதி மதிலுக்குரிய திருக்கோவிலின் பிரம்மாண்டமான பிரதான வாசல் உள்ளது. அதைக் கடந்ததும், கோவிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்குமிடையே, கல்தளம் கொண்ட கிழக்குக் கோடியில் மது புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இது தேனடி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.முக மண்டபத்தில் நந்தி கம்பீரமாய் காட்சி தருகிறது. மகா மண்டபத்திற்குள் நந்தி, பலிபீடம், சூரிய பிரபை ஆகியவை உள்ளன.

பாரிவள்ளல் முல்லைக்கொடிக்குத் தேரளித்த காட்சி சுதைச்சிற்பமாக உள்ளது.மேற்கே லட்சுமி மண்டபமும், கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன. மங்கைபாகரின் திருக்கோலத்தைக் காண வருகைதந்த தேவர்கள் கூடியமர்ந்த இடம் தேவசபா மண்டபம் என்று அழைக் கப்படுகிறது. பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாத வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையில், பாறையிலேயே செதுக்கி உருவாக்கிய அம்மையப்பர் திருமணக் கோலத்துடன் காட்சி தருவதால் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது காய்ச்சல் போக்கும் தலமாகவும், மகப்பேறு அருளும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. பரிகாரம் மகா மண்டபத்தின் மேற்கே மூன்று திருமுகங்கள், நான்கு கரங்கள், மூன்று பாதங்கள் கொண்ட சிறப்புமிக்க சிலாரூபத்தை ஜ்வரபக்த மூர்த்தி என்று கூறுகிறார்கள். கொடுமையான, தீராத காய்ச்சல் உள்ளவர்கள் இம்மூர்த்தியை ஒரே ஒருமுறை வழிபட்டாலே போதும்; எத்தகைய காய்ச்சலும் குணமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் தேனடி தீர்த்தத்தில் நீராடி கொடுங்குன்றநாதரை தரிசித்தால் மகப்பேறு வாய்க்கும்; தீராத நோய்கள் உடனடியாக அகலும்; செல்வமும் செல்வாக்கும் சேரும் என்பது ஐதீகம்.மதுரை- சிங்கம்புணரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரான்மலை. பேருந்து வசதி உண்டு.
 

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.