Skip to main content

வீட்டு சிறையில் பிரதமர்... அமைச்சர்களும் கைது - இராணுவத்தின் நடவடிக்கையால் சூடானில் பரபரப்பு!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

SUDAN

 

சூடான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில், சூடான் அதிபருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. அன்றாட செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளால் வெடித்த இந்தப் போராட்டத்தையடுத்து, 2019ஆம் ஆண்டு அந்தநாட்டில் அல்-பஷீர் என்பவர் தலைமையில் நடந்து வந்த ஆட்சியை கவிழ்த்து, சூடான் இராணுவம் மூன்று மாதம் அவசர நிலையை அறிவித்தது.

 

இதன்பின்னர் சூடானில் இராணுவமும், ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய மக்கள் குழுக்களும் இணைந்து இடைக்கால அரசை நடத்துவது என்றும், இரண்டு வருட அரசியல் நிலை மாற்ற காலத்திற்குப் பிறகு தேர்தலை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவமும் மக்கள் குழுக்களும் இணைந்து ஆட்சி நடத்திவந்தன.

 

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், இடைக்கால அரசைக் கவிழ்க்க முயற்சிகள் நடைபெற்றன. இராணுவத்தில் உள்ள அல்-பஷீரின் விசுவாசிகள் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் இடைக்கால அரசில் விரிசலை ஏற்படுத்தின.

 

இந்தநிலையில், இன்று (25.10.2021) பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை சூடான் இராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. தொழில்துறை அமைச்சர் இப்ராகிம் அல்-ஷேக், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹம்சா பலூல் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பைசல் முகமது சாலே உள்ளிட்டோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். சூடானின் தலைநகருக்குச் செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சூடான் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்