உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அதன் பின்னரான அவரது கருத்துக்கள் டிரம்ப், புதின் போன்றவர்களால் விமர்சிக்கவும்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுத்தீ குறித்து கிரேட்டா கூறிய கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு இடங்களில் எரிந்து வரும் காட்டுத்தீயால் இதுவரை 700 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலபகுதி பாதிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்த கிரேட்டா, "ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற பேரழிவுகளுக்கு நாம் அரசியல்ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகியவற்றை ஆஸ்திரேலிய காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடர்களோடு தொடர்புபடுத்த தற்போதும் தவறிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "ஆஸ்திரேலியாவின் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலிய அரசு தனது கொள்கைகளை அமைக்கும். இதில்தான் எனது கவனம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ஆஸ்திரேலியா என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.