கரோனா தொற்று ஏற்படுவதற்கு 5-ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்று பரவிய வதந்தியால் இங்கிலாந்தில் 20-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தொற்று ஏற்படுவதற்கு 5-ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என இங்கிலாந்து பிரபலம் ஒருவர் தெரிவித்தார்.இதையடுத்து அவர் கூறியதற்கு ஆதரவாகச் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.மேலும் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு யூ-ட்யூபிலும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகின.
5-ஜி டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி,அதன்பின் காற்றில் வேறுசில வாயுக்களை வெளியிடும்.இந்த வாயுக்கள் மூலம்தான் கரோனா வைரஸ் பரவும்.இதனை ஒருசில உலக நாடுகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன' எனச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.இதன் காரணமாக இங்கிலாந்து முழுவதும் 5-ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு எதிராகக் கருத்துகள் எழுந்தன.

இதன் உச்சகட்டமாக அந்நாட்டில் 5-ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் நான்கு நிறுவனங்களின் 20 செல்போன் டவர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.இது அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தின் நான்கு முன்னணி மொபைல் ஆபரேட்டர்கள் 5-ஜி கோபுரங்களை எரிப்பதைத் தடுக்க உதவி கேட்டு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.மேலும்,கரோனாவுடன் 5-ஜி நெட்வொர்க்கை தொடர்புப்படுத்துவதற்கு அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.