Skip to main content

அரிவாள்மனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை; குடிபோதையில் தொழிலாளி வெறிச்செயல்!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

wife passed away police searching her husband

 

கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் அரிவாள்மனையால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கூலித்தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சுந்தரம் (40). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கலா (34). இவர் மூலம் இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரத்தின் இரண்டாவது மனைவி லட்சுமி (30). இவர் மூலம் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி, கட்டட வேலைக்குச் சென்று வந்தார். 

 

இந்நிலையில் முதல் மனைவி கலாவுக்கும், இரண்டாவது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுந்தரத்தால் அவர்களிடையேயான பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இதனால் வெறுப்பு அடைந்த கலா, கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு கோபித்துக்கொண்டு, பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன்களுடன் சென்றுவிட்டார். 


இதனால் இரண்டாவது மனைவி லட்சுமியுடன் சுந்தரம் வசித்து வந்தார். இவர்களின் 12 வயது மகன் லட்சுமியின் தாய் வீட்டிலும், 11 வயது மகன் பள்ளி விடுதியிலும் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் சுந்தரத்திற்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூலை 19ம் தேதி மது அருந்திவிட்டு சுந்தரம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


ஜூலை 20ம் தேதி அதிகாலை அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது சுந்தரத்தின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. முதல் நாள் இரவு, கணவன் மனவிக்குள் கடுமையான தகராறு நடந்ததால் அசம்பாவிதம் ஏதாவது ஆகியிருக்குமோ என அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் சுந்தரத்தின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் லட்சுமி சடலமாகக் கிடந்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தன்று இரவு சுந்தரத்துக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சுந்தரம், அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்து, தாடை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சுந்தரம் தலைமறைவாகி விட்டார். 


எனினும், சுந்தரம் கைது செய்யப்பட்ட பிறகே, கொலைக்கான உண்மைக்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்