Skip to main content

பெட்ரோல், டீசல் விலையானது 19 நாட்கள் நிலையாக இருந்தது ஏன் ? பாஜக அரசுக்கு ஈஸ்வரன் கேள்வி

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
es

 

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டோம் என்று மத்திய அரசு மக்களை முட்டாளாக்குவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:  ’’டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை பைசா கணக்கில் அதிகரித்து தற்போது புதிய உச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்ளாமல் வேடிக்கைப்பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

 

19 நாட்களாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உயர்த்தப்படுகிறது. தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையானது 19 நாட்கள் நிலையாக இருந்தது ஏன் ?. அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் நிலையாக இருக்குமா என்பதை எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது மத்திய அரசின் விருப்பத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது தெளிவாகிறது. இதுபோல விலை ஏற்றத்தின் போது உருவாகும் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து உள்ளதா ? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறுவதாக பேச்சு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுபோன்ற லஞ்சம், ஊழலில் பாஜக தலைமை ஈடுபடவில்லை என்று சொன்னால் தனியார் நிறுவனங்களிடம் கொடுத்த அதிகாரத்தை மத்திய அரசாங்கம் திரும்ப பெறுவதில் என்ன பிரச்சினை இருக்க போகிறது.

 

 இந்த விலையேற்றத்தால் லாரி தொழில் முற்றிலும் முடங்கி போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் தொலைதூரத்திலிருந்து சரக்கு ஏற்றிவரும் லாரிகளுக்கு வாடகை கட்டுப்படியாகாமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். இல்லையென்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும். பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரியை குறைத்து விலையேற்றத்தை உடனடியாக கட்டுக்குள் வைக்கவேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.