சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதற்கு அனைத்து கட்சியினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
சமூகநீதியைப் பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கியவர். பா.ம.கவின் சமூகநீதிக் கொள்கைகளுக்கு துணை நின்றவர். எனது நண்பர். அவரது வாழ்க்கை வரலாறும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.