Skip to main content

நீதிமன்ற உத்தரவை மீறி எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை! விவசாயிகள் கொந்தளிப்பு!!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

சேலத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டதால் சுற்றுவட்டார விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.


சேலம் - சென்னை இடையில் 277.3 கி.மீ. தூரத்திற்கு, எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.10 ஆயிரம் கோடி. இந்த புதிய சாலை வழித்தடம் சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பயணித்து காஞ்சிபுரம் படப்பையில் நிறைவு அடைகிறது. இந்த திட்டத்திற்கு அரசு சொல்லும் இரண்டு முக்கிய காரணங்களில் ஒன்று... சேலம் - சென்னை பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறைகிறது. மற்றொரு காரணம், ஆண்டுக்கு ரூ.700 கோடி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மிச்சமாகிறது.

 

8way

 

இந்த திட்டத்துக்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலையில் கவுத்திமலை, வேடியப்பன்மலை ஆகிய இரண்டு மலைகளை குடைந்தும் சுரங்கவழிப்பாதை அமைக்கப்படுவதும் திட்டத்தின் முக்கிய அம்சம். இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான நிலப்பரப்பு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள். அவர்களுக்கென்று இருக்கும் கடைசி நம்பிக்கையும், ஒரே ஜீவாதாரமும் அந்த நிலம் மட்டுமே.

 


விளை நிலம் பறிபோவது மட்டுமே எதிர்ப்புக்கு காரணம் அன்று. சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, ஜருகுமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் பொதிந்து கிடக்கும் இரும்பு உள்ளிட்ட தாது வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிச்செல்வதற்காக இந்த புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது என்ற அய்யமும் மக்கள் மனதில் இருந்து வருகிறது. 

 


இதற்கிடையே பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ், தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த செப். 14ம் தேதி, மேலும் இரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுவரை இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தல், உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதும் அந்த உத்தரவின் முக்கிய அம்சம் ஆகும்.

 

8way

 

நேற்று (செப். 20, 2018) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காவிட்டால் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த இரு நாள்களாக சேலம் எருமாபாளையம், சன்னியாசிக்குண்டு அருகே உள்ள ஜருகுமலையில் எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மிக ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். 200 அடி ஆழம் வரை துளையிட்டு பரிசோதனை செய்துள்ளனர். 

 


இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது ஜருகுமலையில் சில இடங்களில் பாறைகள் உருண்டு ஓடியதால் மலையடிவாரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். மண் பரிசோதனை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எருமாபாளையம், பாரப்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இன்று காலை (செப்டம்பர் 21, 2018) திரண்டு சென்று மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 

 

8way

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் மண் பரிசோதனை பணிகளை நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமாபாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண் பரிசோதனை பணிகள் தொடர்ந்து நடந்தது.

 


இதுகுறித்து விவசாயிகள் மோகனசுந்தரம், மலர்க்கொடி, கந்தசாமி ஆகியோர் கூறுகையில், ''சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் இரண்டு வார காலத்திற்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. அதையும் மீறி அதிகாரிகள் சாலைப் பணிக்காக மண் பரிசோதனையில் ரகசியமாக ஈடுபடுகின்றனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா?

 


எட்டு வழிச்சாலையால் பயண நேரம் குறையும் மற்றும் 700 கோடி ரூபாய்க்கு எரிபொருள் மிச்சமாகும் என்று முதல்வவ் சொல்கிறார். ஆனால், இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் சுமார் 8000 ஏக்கர் விவசாய நிலங்களில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

 

8way

 

 

8way

 

எட்டு வழிச்சாலை விளை நிலத்தையும் விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. ஊரையும், மக்களையும் பிளவு படுத்தும். எட்டு வழிச்சாலையில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் கடந்துதான் மறு சாலைக்கு வர முடியும் எனும்போது எரிபொருள் செலவு விரயம் ஆகுமே தவிர மீதமாகாது.


மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதைகளை அமைப்பதால் சேலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மலை வளமும், வன வளத்தையும் அழித்து தனியார் லாபம் அடைவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.