![cake](http://image.nakkheeran.in/cdn/farfuture/C8yWMYh6yUUWbIH3WRdywm0AlXGCyKIl9g7naYa2BSs/1590479227/sites/default/files/inline-images/252_6.jpg)
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரபு. இவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது.
இதைப் பார்த்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அந்த வீடியோவைப் பதிவிறக்கம் செய்து அதன் மீது நடத்திய விசாரணையின் அடிப்படையில் விழுப்புரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கடந்த எட்டாம் தேதி மாலை தனது வீட்டில் தமது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக் கத்தியினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கறிஞர் பிரபு அவரது நண்பர்களாக ஆனந்த் மோகன் ராஜேஷ் ஜமாலுதீன் பிரகதீஸ்வரன் வினோத் விக்கி உட்பட 12 பேர் மீது 144 தடை உத்தரவு மீறியது உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பிறந்தநாள் கேக் வெட்ட பயன்படுத்திய இரண்டு பட்டாக் கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஐந்து பேர்களைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.