
திருப்பத்தூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரணித் தலைவராகவும் இருப்பவர் சந்தோஷ். இவர் தனது நண்பர்கள் மற்றும் விஜய் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் டீ குடிக்க திருப்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார்.
பேருந்து நிலையம் எதிரே தனியார் வணிக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைத்தலைவர் முருகன் டீ கடை வைத்துள்ளார். டீ கடை மாஸ்டராக கோபால் என்பவர் இருந்துவருகிறார். கோபாலிடம் 5 டீ கேட்டுள்ளனர். டோக்கன் வாங்கித்தாங்கன்னே எனச் சொல்லியுள்ளனர். எங்ககிட்டயே டோக்கனா எனக்கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
டோக்கன் தந்தால் டீ தாங்கன்னு ஓனர் சொல்லியிருக்காருண்ணே என டீ மாஸ்டர் சொல்லியதை கேட்காமல், சந்தோஷ் டீம் மாஸ்டரைத் தலைமேல் பலமுறை அடித்து தகராறு செய்துள்ளனர். நாங்க எது கேட்டாலும் தரணும், காசு கேட்கக்கூடாது எனச் சொன்னதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது, இது சமூகவலைத்தளத்தில் பரவி வைரலானது. இது குறித்து அடிவாங்கிய கோபால், கடை உரிமையாளர் முருகன் ஆகியோர் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் மீது போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரம் பெரியதாகிப் புகாரான தகவல் நடிகர் விஜய் கவனத்துக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுப்படி சந்தோஷை மன்றப் பதவி, இயக்கப் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி, அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.