Skip to main content

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேனில் திடீர் தீ விபத்து; ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசம்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Sudden fire accident in van in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து அருள் என்பவருக்குச் சொந்தமான லோடு வேனில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக குடியாத்தம் பகுதிக்கு வந்தது. 

அப்போது, குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் இருந்த வைக்கோல் மின் கம்பிகள் உரசி தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீ மளமளவெனப் பரவிய நிலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் இருந்து உடனடியாக வேனை வேகமாக கொண்டு சென்று நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே வேனை ஓட்டுநர் நிறுத்தினார். 

இதனையடுத்து, இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வேனில் ஏற்றி வந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

 செல்போன் பழுது பார்க்கும் கடையில் திடீர் தீ விபத்து!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
sudden fire in a cell phone repair shop

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேஸ்திரி வீதியில் எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த அங்காளன் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை  நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையில் பணியை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடையிலிருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவி கடையில் இருந்த செல்போன், லேப்டாப், மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் எனச் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.