Skip to main content

கணவனுக்கு தெரியாமல் உஷா உடலை ஒப்படைத்த போலிஸ் ! 

Published on 08/03/2018 | Edited on 08/03/2018
trichy

 

திருச்சியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா, உஷா என்ற தம்பதியைப் போலீஸார் நிறுத்தியுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாததால் அந்தத் தம்பதியினர் நிற்காமல் சென்றுள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்ற போலீஸார் ஓர் இடத்தில் மடக்கிப் பிடித்துள்ளார். அதில் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்துள்ளார்.  இதில், நிலை தடுமாறி ராஜாவும் அவரின் மனைவியும் கீழே விழுந்தபோது அருகில் வந்த வேன் மோதி 3 மாத கர்ப்பிணியான உஷா உயிரிழந்தார். 

 

இந்நிலையில் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்கள் அந்தப் பகுதியில் திரண்டு போலீஸுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து, பொதுமக்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது.  இதில் ஏராளமானோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

 

கர்ப்பிணி பெண் உஷாவின் உயிரிழப்பிற்கு காரணமாகி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ் அதே பகுதியில் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் கர்ப்பிணி பலியான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே மக்கள் ஒன்று திரண்டு போலீசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். நிலைமை மேலும் மோசமானதால் போலீஸ் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.

 

கர்ப்பிணி உயிரிழப்பிற்கு காரணமாக இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் திருவெறும்பூர் போலீசார் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்தனர்.  அவர் மீது 304(2) (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரியாமல் தாக்குதல்), 336 (பலத்த காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இன்று காலை 7 மணியளவில் நீதிபதி ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 21-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

நேற்று வரை விபத்து வழக்காகவே இந்த மரணத்தை சித்தரித்த போலீசார் உஷா மற்றும் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்டு பொது சொத்தை சேதப்படுத்தியாக வழக்குப்பதிவு செய்து கைதாகியுள்ள 23 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதில் ஆதவன் என்கிற மாணவர் பிளஸ் 2 மற்றும் 5 பேர் கல்லூரி மாணவர்கள் கைது செய்திருந்தனர். அவர்களை இன்று மாலை விடுதலை செய்தனர். 

 

ராஜாவை பாத்து ஆறுதல் சொல்வதற்கு சீமான், மற்றும் வானதி சீனிவாசன் உள்ளே சென்ற போது உஷாவின் உடலை அவர்கள் உஷாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  உடல் வெளியே சென்றவுடன் விஷயம் கேள்விப்பட்டு வெளியே வந்த ராஜா என்னிடம் எதையும் சொல்லாமல் எப்படி என் மனைவி உடலை ஒப்படைக்கலாம் என்று பத்திரிகையாளர்களிடம் புகார் தெரிவித்துக்கொண்டிருந்தார்.  இதற்கு இடையில் இறந்து போன உஷாவிற்காக தமிழக அரசு 7 இலட்சம் நிவாரணம் அறிவித்தது குறிப்பிதக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.