
திமுக தலைவரின் மகனும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். விழுப்புரம் பஸ் நிலையம் அருகில் 'ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக முன்னேறி முதல்வராகவந்ததாக கூறுகிறார். ஆனால் அவர் சசிகலா காலில் விழுந்து கிடந்துதான் முதல்வர் பதவி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே சசிகலா வரும் 27-ஆம் தேதி கர்நாடக சிறையில் இருந்து விடுதலையானதும் முதல்வர் பழனிச்சாமிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படப்போகிறது. அதிலிருந்து விடுபட மீண்டும் சசிகலா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து விடுவார் என்ற நிலை உள்ளது. இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளதாக விளம்பரம் செய்கிறார்கள். இந்தியாவில் ஊழலில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. சாலை காண்ட்ராக்டில் 1,600 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கூறுகிறார் முதல்வர் பழனிச்சாமி. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
அதிமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று கேளுங்கள். அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டனர். லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் பிஜேபி வெற்றி பெற்றது. ஆனால் தமிழக மக்கள் அவர்களுக்கு நாமம் போட்டனர். அந்த கோபம் மோடிக்கு உள்ளது. அதனால் தான் தமிழகத்திற்கு நிவாரணமாக 10,000 கோடி ரூபாய் கேட்டதில் 1,500 கோடியை மட்டுமே வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று திமுக ஆட்சி அமைக்க போவது உறுதி'' என்றார்.