Skip to main content

”ரேசன் கடைகளில் கழிவறைகள் கட்டப்படும்” - நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"Toilets will be built in ration shops" Consumer Protection Department Secretary Radhakrishnan

 

தமிழக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்குதல் மற்றும் நடமாடும் வங்கி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

 

அதனை தொடர்ந்து கல்லுக்குழி நியாய விலைக்கடையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஆய்வு செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “முதல்வர் கடந்த மே 24ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகச்சிறப்பாக உள்ளது.  குறிப்பாக அதிக அளவில் திருச்சி மாவட்டத்தில் 6-ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்து பாதுகாக்கக் கூடிய குடோன்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அதவத்தூர் கிராமத்தில் 16-ஆயிரம் மெட்ரிக் டன் அளவு பாதுகாக்கவும், 4-ஆயிரம் மெட்ரிக் டன் இருங்களூர் பகுதியில் பாதுகாக்கவும் குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது.

 

தமிழகம் முழுவதும் 20-இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய தகுந்த வகையில் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது.  109 இடங்களில் பாலித்தீன் தார்ப்பாய்கள் கொண்டு நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விரைவில் நெல் மூட்டைகள் குடோன்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 30-இடங்களில் குடோன்களை வாடகைக்கு எடுத்து நெல் மூட்டைகள் பாதுகாக்கபட்டு வருகிறது. விரைவில் அரசு தன்னுடைய சொந்த நிதியில் குடோன்களை கட்டி நெல் மூட்டைகளை பாதுகக்கும். 

 

கூட்டுறவு வங்கிகளில் வைப்பு நிதியாக மொத்தம் 67,000 கோடி உள்ளது. இதில் 60,000 கோடி கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75-இடங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றியமைக்கப்படும். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டு அதில் ஊனமுற்றவர்களுக்காகவும், வயதானவர்களுக்கும் ஏற்ப புதிய ரேஷன் கடைகளில் கழிவறைகள் கட்டப்படும்.

 

தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுப்பதற்கான் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் 421 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 SP, 12 DSP, 24 ஆய்வாளர்கள் ஆகியோரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறிய அளவில் கடத்துபவர்களை விட பெரிய முதலைகளை பிடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பெரிய அளவிலான கடத்தலில் ஈடுபட்டவர்கள் 111 பேர் குண்டர் சட்டத்திற்கு இணையான சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 11,120 பேர் சிறிய அளவில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உள்ள 3997 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் காலாவதியாகாது. ஒரு வேளை எந்த பொருளும் வாங்காதவர்களுக்கும் ரேஷன் கார்டு தேவையென்றால் கௌரவ குடும்ப அட்டை உள்ளது. அந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை தமிழகத்தில் 60,000 குடும்பங்கள் கௌரவ குடும்ப அட்டையை வைத்துள்ளது. 2,45,000 நபர்கள் ஒரு நபர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். இதில் இறந்தவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

 

அதேபோல் இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாமல் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 14,26,145 என  உள்ளது. இதில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்கப்பட வேண்டும் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது . கடைகளில் பிரதமர் படம் வைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசு இடையே ஒரு வரைமுறை உள்ளது. அதைப் பற்றி தற்போது பேச வேண்டாம்.

 


 

சார்ந்த செய்திகள்