Skip to main content

ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட்டைத் திறக்க அரசு அனுமதி!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

oxygen production sterlite plant reopening tn govt order

 

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதியை அளித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர்செய்து இயக்கிக்கொள்ள தற்காலிகமாக, (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்- 19 நோய்த் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்தக் கால அவகாசம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின் உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

 

oxygen production sterlite plant reopening tn govt order

 

உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவை போக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

 

பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதிசெய்யும். எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர, வேறு எந்த அலகும் செயல்பட அனுமதிக்கப்படாது.

 

இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியைக் கண்காணிக்க, தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்புக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்தக் குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்தக் குழு முடிவெடுக்கும்.

 

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு, தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்