திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேணடும் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை எழுப்பினர்.

இதனையடுத்து சுகாதார துறையினர் ரூபாய் 2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க முடிவு செய்தனர். ஆனால் தற்போது உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்த போதிய இடமில்லை. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே உள்ள நாகை முன்னாள் எம்பியும் திமுக மாநில விவசாய அணி செயலாளருமான ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பூர்வீக சொத்தான சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் இடத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி. இன்று முறையாக இடத்தை பத்திரப்பதிவு செய்து தானமாக கொடுக்க முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஏ.கே.எஸ்.விஜயனின் தந்தையான முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் வாரிசுகளான மனைவி சுப்பம்மாள், மகள்கள் கல்பனா, யமுனா, மகன்கள் கார்மேகம், விஜயன் ஆகியோர் இன்று வந்தனர். அங்கு திருவாரூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஸ்டேலின் மைக்கல், சுகாதார துறை உதவி திட்ட மேலாளர் அரவிந்த், வட்டார மருத்துவர் அலுவலர்கள் முத்துலட்சுமி, பிரசாந்த், கிள்ளிவளவன், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சையயது அபுதாகிர் ஆகியோர் முன்னிலையில் பத்திரப்பதிவு நடைப்பெற்றது.
பின்னர் தானமாக வழங்கிய இடத்திற்கான பத்திரத்தை ஏ.கே.எஸ்.விஜயன் குடும்பத்தினர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் ஸ்டேலின் மைக்கலிடம் வழங்கினர். அப்பொழுது திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் அய்யப்பன், அரசு மருத்துவர்கள் பத்மேஷ், ராஜீ, சுகாதார செவிலியர்கள் சாந்தகுமாரி, சுபாஸ்ரீ மற்றும் ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினர், உட்பட பலரும் உடன் இருந்தனர்.
இந்தநிலையில் அரசு மருத்துவமனை கட்ட இடம் தனமாக வழங்கிய திமுக முன்னாள் எம்பி ஏகேஎஸ்.விஜயன் குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டினர். இது குறித்து திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நம்மிடம் கூறும் போது தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞரின் வழியில் வளர்ந்த குடும்பம் எங்கள் குடும்பம். நம்மாள் மக்கள் பயனடைவார்கள் என்றால் அதை செய்ய வேண்டும் என்று அடிக்கடி தலைவர் சொல்வார். அதன்படி தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட எங்களின் குடும்பத்தின் பூர்விக சொத்தை இன்று தனமாக வழங்கியுள்ளோம்.
இந்த நிகழ்வு எங்கள் குடும்பத்திற்கு முழு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது. எனது வீட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க நினைத்தேன். ஆனால் வீடு உள்பகுதியில் இருந்ததால் சாலையில் இருந்து மக்கள் இறங்கி வந்து திரும்ப செல்ல சிரமம் இருப்பதால் தான் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள இந்த இடத்தை தனமாக வழங்கினோம். ஏழை மக்களுக்கு நாம் செய்யும் உதவி தான் நிலைத்திருக்கும். உங்களால் முடிந்ததை கழக தொண்டர்கள் ஏழைகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும் தளபதி அடிக்கடி சொல்வார். எங்கள் குடும்பத்தால் முடிந்ததை செய்திருக்கிறோம் என்றார் மகிழ்வோடு.