திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்த சோலையம்மாள் என்கிற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தையோடு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் காணாமல் போனார். இந்த விவகாரத்தில் ஒரு படுபாதக செயல் தற்போது வெளிவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்த குமார் - சோலையம்மாள் தம்பதிக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. கடந்த 16ஆம் தேதி பச்சிளம் குழந்தையுடன் சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இது குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி கிராமிய காவல்நிலைய போலீசார், சென்னையில் இருந்த சோலையம்மாளை செப்டம்பர் 28ந்தேதி இரவு கைது செய்து ஆரணி அழைத்து வந்தனர்.
காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோலைம்மாளுக்கும் அவரது கணவர் குமாரின் சகோதரர் பாபுவுக்கும் தவறான உறவு இருந்துள்ளது. அந்த தொடர்பின் மூலமாகவே அந்த பெண் குழந்தை பிறந்ததாக சோலையம்மாள் - பாபு இருவரும் நம்பினர். இது இருவருக்கும் பிற்காலத்தில் ஆபத்து அதனால் குழந்தையை கொலை செய்துவிடுவோம் எனச்சொல்லி அக்குழந்தையை சோலையம்மாவும், பாபுவும் சேர்ந்து கொலை செய்து சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்ததாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் சொல்வது உண்மையா என கண்டறிய அவர் புதைத்தாக சொல்லப்பட்ட இடத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் செப்டம்பர் 30ந்தேதி தோண்ட முடிவு செய்துள்ளனர். அதன்பின்பே மற்றவை தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.