Skip to main content

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரிய வழக்கு!- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 5- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் உஷா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

thiruvallur district palaverkadu lake chennai high court order


அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழவேற்காடு ஏரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், கரையோரம் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகக் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக ஏரியின் பரப்பு சுருங்கி, அதன் சுற்றுச்சூழலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். மேலும், இந்தப் பகுதியில் தனியார் துறைமுகம் கட்ட உள்ளதால்,  அப்பகுதி மீனவர்களைக் காலி செய்ய அரசு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். 
 

இதையடுத்து, பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 5- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்